ஆன்மிகம்
ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு தீபாராதனையும், அகிலாண்டேஸ்வரி அம்மனின் சிறப்பு அலங்காரத்தையும் காணலாம்.

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா கோலாகலம்

Published On 2017-02-25 06:32 GMT   |   Update On 2017-02-25 06:32 GMT
வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் நேற்று மகாசிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது. விடிய விடிய பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வேலூர் கோட்டையில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு நேற்று காலை சாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 6 மணிக்கு ருத்ராபிஷேகம் காலசந்தி பூஜையும், 9 மணிக்கு 1, 008 சங்காபிஷகமும் நடந்தது.

பின்னர் காலை 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 1, 008 சங்காபிஷேகம், உச்சிகால பூஜையும், பகல் 3 மணிக்கு விநாயகர் அபிஷேகம், 6 மணிக்கு ஜலகண்டேஸ்வரர் சிறப்பு அபிஷேகம், மாலை 6 மணிக்கு முதல் ஜாம பூஜை, தீபாராதனை ஆகியவை நடந்தது.

9 மணிக்கு 2-ம் ஜாமபூஜை, தீபாராதனை நடந்தது. இரவு 11-30 மணிக்கு ஏகாதசி ருத்ராபிஷேக பூஜையும் நடைபெற்றது.

இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 4-ம் கால ஜாமபூஜையும், அதைத்தொடர்ந்துசாமி திருவீதி உலா, தீபாராதனை நடக்கிறது.

மகாசிவராத்திரியை முன்னிட்டு நேற்று காலை முதலே ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்டவரிசையில் சென்று சாமிதரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவுமுழுவதும் விடிய விடிய பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபனத்தினர் செய்திருந்தனர்.

Similar News