ஆன்மிகம்

ஸ்ரீஅருணகிரிநாதரை தாங்கி பிடித்த முருகன்

Published On 2017-02-20 10:16 GMT   |   Update On 2017-02-20 10:16 GMT
திருவண்ணாமலை முருகனின் புகழ்பாடும் தலமாகவும் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் எந்த ஒரு சிவாலயத்திலும் இப்படி முருகப்பெருமானின் சிறப்பான சன்னதி இல்லை.
திருவண்ணாமலையில் வாழ்ந்தவர் அருணகிரிநாதர். மிகப்பெரும் பணக்காரராக திகழ்ந்த இவர், சொகுசு பேர் வழியாக இருந்தார். எப்போதும் விலைமாது வீடே கதி என்று கிடந்தார்.

இதனால் செல்வம் எல்லாம் கரைந்தது. ஒரு கட்டத்தில் சகோதரி திருமணத்துக்காக வைத்திருந்த நகைகளையும் விற்று விலைமாதர்களிடம் செலவழித்து விட்டார்.

தவறான பழக்கம் காரணமாக அவர் குஷ்ட நோயால் பிடிக்கப்பட்டார். செல்வத்தையும் இழந்து, உடல் நலமும் பாதிக்கப்பட்டதால் விரக்தி அடைந்த அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

திருவண்ணாமலை கோவிலுக்கு சென்ற அவர் வல்லாள மகாராஜா கோபுரத்தில் ஏறி கிழே குதித்தார். ஆனால் முருகப்பெருமான் அவரை தம் கைகளில் ஏந்தி காப்பாற்றினார்.

அவரது குஷ்ட நோயை குணப்படுத்தி அருளிய முருகப்பெருமான், இனி தம்மை புகழ்ந்து பாடும்படி பணித்தார். அருணகிரிநாதரின் நாக்கில் ‘‘முத்தை தரு’’ என்று எழுதி பதிகங்கள் பாட உத்தர விட்டார். அதன் பிறகு அருணகிரிநாதர் சுவாமிகள் முருகனை புகழ்ந்து ஏராளமான பதிகங்கள் பாடினார். இதனால் இத்தலம் முருகனின் புகழ்பாடும் தலமாகவும் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் எந்த ஒரு சிவாலயத்திலும் இப்படி முருகப்பெருமானின் சிறப்பான சன்னதி இல்லை.
அறுபடை வீடுகளில் நடக்கும் அனைத்து திருவிழாக்களும் இத்தலத்து முருகன் சன்னதியில் நடத்தப்படுகிறது. தைப்பூசத்தன்று பக்தர்கள் 1008 காவடி எடுத்து ஆடி வருவது கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.

இதற்காக 1008 காவடிகளும் ஆண்டுதோறும் திருவண்ணாமலை தலத்திலேயே தயாரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் இப்படி காவடிகள் தயாரிக்கப்படுவதில்லை.

Similar News