ஆன்மிகம்

புதுக்கூரைப்பேட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2017-02-11 04:09 GMT   |   Update On 2017-02-11 04:09 GMT
புதுக்கூரைப்பேட்டை மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விருத்தாசலம் அருகே புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதன்படி கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி கடந்த 6-ந்தேதி கோவிலில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் விக்னேஷ்வரபூஜை, வாஸ்துசாந்தி நடைபெற்றது. 7-ந்தேதி முதல்கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, 8-ந்தேதி 2-ம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி நடைபெற்றது.

கும்பாபிஷேகநாளான நேற்று முன்தினம் காலையில் பிம்பசுத்தி, தத்துவார்ச்சனை, நாடிசந்தனம், கடம் புறப்பாடு நடந்தது. இதில் மேள, தாளங்கள் முழங்க யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, கோவில் விமான கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து கோவில் வளாகத்தில் இருந்த நவக்கிரகங்களுக்கும், மூலவருக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் புதுக்கூரைப்பேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Similar News