ஆன்மிகம்

ஓமலூர் ஓங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

Published On 2016-12-05 06:36 GMT   |   Update On 2016-12-05 06:36 GMT
ஓமலூரை அடுத்த பல்பாக்கி செல்வகணபதி, ஓங்காளியம்மன், மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பல்பாக்கியில் உள்ள செல்வகணபதி, ஓங்காளியம்மன், மகாமாரியம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதையொட்டி நேற்று முன்தினம் காலை மங்கள இசை, விநாயகர் பூஜை, புண்யாகம், இரண்டாம் கால யாகவேள்வி, பூர்ணாஹூதி, தீபாராதனை, தொடர்ந்து கோபுர கலசம் வைத்தல் ஆகியவை நடைபெற்றது. மாலையில் மங்கள இசை, விநாயகர் பூஜை, வருண பூஜை, அஷ்டலட்சுமி பூஜை, தனபூஜை, திரவிய ஹோமம், மகா தீபாராதனை ஆகியவை நடந்தது.

விழாவில் நேற்று காலை 7 மணிக்கு நான்காம் கால பூஜைகளும், 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கோபுரம் மற்றும் அனைத்து தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தசதானம், தசதரிசனம், சிறப்பு பூஜை, அன்னையின் ஆனந்த கோலாகல மகா தீபாரதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தது. பின்னர் சிறப்பு அன்னதானமும் நடந்தது. விழாவில் ஓமலூர் எம்.எல்.ஏ. வெற்றிவேல், ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் அசோகன், சித்தேஸ்வரன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மல்லிகா, நகர செயலாளர் சரவணன் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர், பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் ஓமலூர் முன்னாள் எம்.எல்.ஏ. பல்பாக்கி கிருஷ்ணன், கோவிந்தராஜ், பெரியசாமி, சித்துராஜ், சசிகுமார், சிந்தாமணி, மாரியண்ணன், சதாகுமார், அர்த்தனாரி, சண்முகம், சீனிவாசன் மற்றும் ஊர் பொதுமக்கள், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

Similar News