ஆன்மிகம்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

Published On 2016-11-30 08:33 GMT   |   Update On 2016-11-30 08:33 GMT
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாதந்தோறும் அமாவாசை விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி கார்த்திகை மாத அமாவாசை விழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடைதிறக்கப்பட்டு கருவறையில் உள்ள அங்காளம்மனுக்கு பால், தயிர், சந்தனம், குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. உற்சவ அம்மனுக்கு அன்னபூரணி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது.

இரவு 11.25 மணியளவில் உற்சவ அம்மனை பம்பை மேளதாளம் முழங்க வடக்கு வாயில் வழியாக கொண்டு செல்லப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்த்தினர்.

பின்பு பூசாரிகள் பக்திப் பாடல்கள் பாடினர். அம்மன் ஊஞ்சலில் முன்னும் பின்னும் அசைந்தாடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 12.30 மணிக்கு அம்மனுக்கு அர்ச்சனையும், தொடர்ந்து மகாதீபாரதணை, நடை பெற்றவுடன் ஊஞ்சல் உற்சவம் முடிவடைந்தது-.

விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நூட்டி ராமமோகன் ராவ், வட்டார வளர்ச்சி அலுவலர் அறவாழி திருவண்ணாமலை, உதவி ஆணையர் மோகனசுந்தரம் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

விழாவுக்கான ஏற்பாடு களை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழுதலைவர் ஏழுமலை பூசாரி, அறங்காவலர்கள் ரமேஷ், கணேசன், செல்வம், சரவணன், மணி, சேகர், கண்காணிப்பாளர் வேலு, ஆய்வாளர் அன்பழகன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Similar News