சினிமா

பாரதிராஜா மீது வழக்கு - பழிவாங்கும் செயல் என வைரமுத்து கண்டனம்

Published On 2018-05-13 06:50 GMT   |   Update On 2018-05-13 06:50 GMT
இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு செய்யப்பட்டது, பழிவாங்கும் செயல் என கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். #BharathiRaja #Vairamuthu
சென்னை வடபழனியில் கடந்த ஜனவரி மாதம் நடந்த சினிமா படத்தொடக்க விழாவில் இயக்குனர் பாரதிராஜா கலந்துகொண்டு பேசினார்.

அப்போது பாரதிராஜா, ‘இந்து கடவுளான பிள்ளையாரை இறக்குமதி கடவுள் என்று பேசிய கவிஞர் வைரமுத்துவுக்கு தலைகுனிவு ஏற்படுத்துவோரின் தலையை எடுக்கவும் தயங்க மாட்டோம்’ என்று ஆவேசமாக பேசினார்.

இதுகுறித்து இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த வி.ஜி.நாராயணன் என்பவர் இந்து கடவுளை பாரதிராஜா அவமதித்து விட்டதாக வடபழனி போலீசில் புகார் செய்தார்.

ஆனால் புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிடுமாறு சென்னை ஐகோர்ட்டில் வி.ஜி.நாராயணன் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து வடபழனி போலீசார் இயக்குனர் பாரதிராஜா மீது நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.



இதற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்து, ‘பாரதிராஜா மீது வழக்கு பழிவாங்கும் செயலாகும். வழக்கு பெரிதல்ல; ரப்பர் மரத்துக்கு ரணங்கள் புதிதல்ல. அவரை நாங்கள் சட்டப்படி மீட்டெடுப்போம்’ என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். #Bharathiraja #Vairamuthu
Tags:    

Similar News