சினிமா செய்திகள்

ஓடிடியில் வெளியிட வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கிறது - இயக்குனர் செல்வகுமார் செல்லப்பாண்டியன்

Published On 2022-07-18 09:38 GMT   |   Update On 2022-07-18 09:38 GMT
  • மைக்கேல் தங்கதுரை மற்றும் ஜிஷ்ணு மேனன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் வார்டு 126.
  • இப்படத்தில் ஷ்ரிதா சிவதாஸ், சாந்தினி தமிழரசன், வித்யா பிரதீப், ஸ்ருதி ராமகிருஷ்ணா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

அறிமுக இயக்குனர் செல்வகுமார் செல்லப்பாண்டியன் இயக்கத்தில் எஸ்எஸ்பி டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'வார்டு 126'. தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்தும் விதமாக ரொமான்டிக் இன்வெஸ்டிகேடிவ் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. பெண்களை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் ஷ்ரிதா சிவதாஸ், சாந்தினி தமிழரசன், வித்யா பிரதீப், ஸ்ருதி ராமகிருஷ்ணா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, நாயகர்களாக மைக்கேல் தங்கதுரை மற்றும் ஜிஷ்ணு மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் சோனியா அகர்வால் மற்றும் ஸ்ரீமன் ஆகியோர் நடித்துள்ளனர்.


எஸ்கே சுரேஷ் குமார் ஒளிப்பதிவை மேற்கொள்ள படத்திற்கு வருண் சுனில் இசையமைத்துள்ளார். இவர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தொகுப்பை தியாகு கவனிக்கிறார்


இப்படம் குறித்து இயக்குனர் செல்வகுமார் செல்லப்பாண்டியன் கூறும்போது, ஒவ்வொரு துறையிலும் ஒரு இருண்ட பக்கங்கள் இருக்கிறது. அதே போல் நான் ஐடி துறையில் பணியாற்றிய போது என் கண் முன்னரே நடந்த அதன் இருண்ட பக்கங்களின் நிகழ்வுகளை மையப்படுத்தி இந்த கதையை உருவாக்கியுள்ளேன். வார்டு-126 என்ற தலைப்பு ஒரு முடிவின் தொடக்கமாக இருக்கும். படத்தை துவங்கிய சமயத்தில் தான் கொரோனா தாக்கம் ஆரம்பித்தது. ஆனால் அதையெல்லாம் தாண்டி பல சவால்களை சந்தித்து படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்.


விரைவில் இந்த படத்தை தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இந்த காத்திருப்பு காலத்தில் ஏற்கனவே கொரோனோ தாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புடன் இன்னும் கூடுதல் சுமை தான் ஏற்பட வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அதனால் தியேட்டர்களில் வெளியிட்டு உடனடியாக முதலீட்டை திரும்பப் பெறுவது தான் புத்திசாலித்தனமாக இருக்கும் என முடிவு செய்துவிட்டோம்.

அதேசமயம் ஒடிடியில் படத்தை வெளியிடுவதற்கான வாசலையும் திறந்தே வைத்துள்ளோம். பொதுவாக ஓடிடியில் படத்தை வெளியிடுவது சுலபம் என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் நிஜத்தில் ஓடிடி தளத்தில் படத்தை வெளியிடுவதற்கு நீண்ட நாள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. காரணம் இந்தமுறையில் படத்தை வெளியிடுவதற்கும் பல படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன' என்றார் இயக்குனர் செல்வகுமார் செல்லப்பாண்டியன்.


Tags:    

Similar News