சினிமா செய்திகள்
பிரியா மோகன்

உக்ரைனில் சிக்கினேனா? பிரபல நடிகை விளக்கம்

Published On 2022-02-28 07:59 GMT   |   Update On 2022-02-28 07:59 GMT
மலையாளப் படங்களில் நடித்து பிரபலமான நடிகை பிரியா மோகன், தன்னைப் பற்றி வெளியான செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல மலையாள நடிகை பிரியா மோகன். இவர் தமிழில் பிறப்பு படத்தில் நடித்துள்ள நடிகை பூர்ணிமா இந்திரஜித்தின் சகோதரி ஆவார். பிரியா மோகன் சமீபத்தில் தனது கணவரும், நடிகருமான நிஹல் பிள்ளையுடன் உக்ரைன் சென்றதாகவும், ரஷிய படையெடுப்பினால் இருவரும் இந்தியா திரும்ப முடியாமல் உக்ரைனில் சிக்கி தவிப்பதாகவும் இணைய தளங்களில் புகைப்படங்களுடன் தகவல் பரவின. 

இது மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் பிரியா மோகன் நிலைமை குறித்து விசாரிக்க தொடங்கினர். பிரியா மோகனை மீட்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலைத்தளத்தில் ரசிகர்கள் பதிவுகள் வெளியிட்டனர். இதை பார்த்து அதிர்ச்சியான பிரியா மோகன், தான் உக்ரைனில் இல்லை என்று மறுத்துள்ளார். 



அவர் கூறும்போது, “நான் கடந்த ஆகஸ்டு மாதம் உக்ரைன் சென்று இருந்தேன். அப்போது அங்கு நான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் இப்போது சிலர் வலைத்தளத்தில் வெளியிட்டு உக்ரைனில் நான் சிக்கி கொண்டதாக தகவல் பரப்பி உள்ளனர். இது தவறான தகவல். நான் இப்போது கொச்சியில் குடும்பத்துடன் இருக்கிறேன். உக்ரைனில் இல்லை. தவறான தகவல்களை பகிர வேண்டாம்’’ என்று கூறியுள்ளார்.
Tags:    

Similar News