சினிமா

பேசிய ஊதியத்தை தராமல் நாமம் போட்டுகிட்டதுதான் அதிகம் - கஸ்தூரி வருத்தம்

Published On 2018-08-04 09:08 GMT   |   Update On 2018-08-04 09:08 GMT
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த கஸ்தூரி, என்னை பலர் காசு வி‌ஷயத்துல ஏய்ச்சிருக்காங்க. பேசிய ஊதியத்தையே வாங்காம நாமம் போட்டுகிட்டதுதான் அதிகம் என்று கூறியுள்ளார். #Kasthuri
1990-களில் முன்னணி நாயகியாக வலம் வந்தார் நடிகை கஸ்தூரி. ஆத்தா உன் கோவிலிலே, செந்தமிழ் பாட்டு, அமைதிப்படை, சின்னவர், புதிய முகம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்துள்ளார். 
திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கிய இவர் அவ்வப்போது ஒருசில படங்களில் நடிக்கிறார். ஒரு சில பாடல்களுக்கும் நடனமாடி வருகிறார்.

சமீபத்தில் திரைக்கு வந்த தமிழ் படம்-2 படத்திலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். சமூக மற்றும் அரசியல் வி‌ஷயங்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் பதிவிட்டு அவ்வப்போது ட்விட்டர் சண்டையிலும் ஈடுபட்டு வருகிறார். 



ஒரு ரசிகர், ‘‘நீங்கள் நடித்து வாங்கிய சம்பளத்துக்கு உரிய வருமான வரி செலுத்தி இருக்கிறீர்களா?’’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த கஸ்தூரி, ‘‘நான் வரி ஏய்ச்சதில்லை. என்னை பலர் காசு வி‌ஷயத்துல ஏய்ச்சிருக்காங்க. பேசிய ஊதியத்தையே வாங்காம நாமம் போட்டுகிட்டதுதான் அதிகம். தமிழ் படம்-2 காட்டுறாங்களே, வெயிலு மழையில கஷ்டப்பட்டு பாடி ஆடி கடைசில மூணு ரூபா சம்பளம். அதுபோலத்தான்’’ என்று கூறியுள்ளார். 

கஸ்தூரி ஏமாந்ததை கேட்டு ரசிகர்கள் அவர் மீது பரிதாபப்பட்டு ஆதரவாக கருத்து பதிவிட்டு வருகிறார்கள். #Kasthuri

Tags:    

Similar News