சினிமா
போராடவே கூடாதென்று ரஜினி சொல்லவில்லை - இயக்குனர் பா.ரஞ்சித்
போராட்டத்தால் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும் என்று ரஜினிகாந்த் கூறியதற்கு, போராடவே கூடாதென்று ரஜினி சொல்லவில்லை என்று இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். #Kaala #Ranjith
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் ‘காலா’. இப்படம் ஜூன் 7ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் இருபிரிவினருக்கு இடையே நடைபெற்ற மோதலில், 3 பேர் கொல்லப்பட்டனர். சிலர் காயத்துடன் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் இயக்குனர் பா.இரஞ்சித்.
அப்போது, போராட்டத்தால் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும் என்று ரஜினிகாந்த் நேற்று கூறியது பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த பா.இரஞ்சித், “அது அவருடைய கருத்து. போராட்டத்தில் தான் நான் இருக்கிறேன். போராட்டத்தின் மூலமாகத்தான் இங்கிருக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். ரஜினி சாரும் ‘போராட்டமே கூடாது’ எனச் சொல்லவில்லை. காலையில் அவரிடம் பேசினேன். ‘போராட்டமே வேண்டாம் என்று நான் பேசவில்லை.
ஆனால், போராட்டத்தில் இந்த மாதிரியான அசம்பாவிதங்கள் நடக்கும்போது வலி அதிகமாக இருக்கிறது’ என்ற வருத்தத்தை என்னிடம் தெரிவித்தார். போராட்டமே கூடாது என்றால், நான் இங்கு வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஒவ்வொரு உரிமையையும் போராடித்தான் பெறமுடியும். நிச்சயமாகப் போராடுவோம்” என்று தெரிவித்தார்.