சினிமா

லண்டனை சேர்ந்த மைக்கேலுடன் திருமணமா? - சுருதிஹாசன்

Published On 2018-05-01 04:59 GMT   |   Update On 2018-05-01 04:59 GMT
சமீபகாலமாக லண்டனை சேர்ந்த மைக்கேலுடன் ஊர் சுற்றி வரும் நடிகை சுருதிஹாசன், அவருடன் திருமணமா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
சுருதிஹாசன் நடிப்புக்கு இடைவெளி விட்டு இருக்கிறார். லண்டனை சேர்ந்த மைக்கேலுடன் ஜோடியாக சுற்றுவதால் இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளது என்றும் தகவல்கள் பரவுகின்றன. இந்த நிலையில் ஐதராபாத்தில் சுருதிஹாசன் அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி:- கமல்ஹாசன் அரசியல் பிரவேசம் குறித்து?

பதில்:- எனது தந்தைக்கு சமூகம் நன்றாக இருக்க வேண்டும் என்ற அக்கறை இருப்பதால் அரசியலுக்கு வந்துள்ளார். இது பெருமையாக இருக்கிறது. அரசியல்வாதி ஆனபிறகு முன்பை விட பிஸியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறார். நாட்டில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவார்.

கேள்வி:- நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?

பதில்:- எனக்கு அரசியல் தெரியாது. ஒரு மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் அரசியல் புரியாமல் அந்த பக்கம் போகக்கூடாது என்பது எனது கருத்து. எதிர்காலத்தில் அரசியல் ஞானம் ஏற்பட்டால் அப்போது அரசியலுக்கு வருவது பற்றி முடிவை சொல்கிறேன்.

கேள்வி:- சினிமாவில் நடிக்காமல் இடைவெளி ஏன்?

பதில்:- நடிக்க வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. எனவே ஒரு மாற்றத்துக்காக இடைவெளி எடுத்தேன். தற்போது கதைகள் கேட்டு வருகிறேன். இனிமேல் தொடர்ந்து நடிப்பேன். விரைவில் படம் தயாரிக்கும் திட்டமும் உள்ளது. நல்ல கதைகள் அமைந்தால் தயாரிப்பேன்.

கேள்வி:- டைரக்டு செய்வீர்களா?

பதில்:- எனது தோழிகள் டைரக்டு செய்யும்படி வற்புறுத்துகிறார்கள். ஆனால் டைரக்டருக்கு பொறுப்பு அதிகம். அதை இப்போது செய்ய மாட்டேன்.

கேள்வி:- கடவுள் நம்பிக்கை பற்றி?

பதில்:- கடவுள் நம்பிக்கை நிறைய இருக்கிறது. அடிக்கடி கோவிலுக்கு செல்வேன். பிடித்த கடவுள் முருகன்.

கேள்வி:- லண்டனை சேர்ந்த மைக்கேலை திருமணம் செய்துகொள்வீர்களா?

பதில்:- நான் இப்போது திருமணம் செய்துகொள்ளமாட்டேன். மைக்கேல் எனது நண்பர். இதற்கு மேல் எதுவும் சொல்ல மாட்டேன். என் வாழ்க்கையில் ரகசியம் எதுவும் இல்லை. திருமணம் நிச்சயமானால் உடனே அறிவிப்பேன்.

இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்
Tags:    

Similar News