சினிமா
செங்குன்றத்தில் போக்குவரத்து பாதிப்படைய வைத்த சமந்தா
செங்குன்றத்தில் ஜி.என்.டி சாலையில் உள்ள வணிக வளாகத்திற்கு வந்த சமந்தா, அங்கு சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்தை பாதிப்படைய வைத்திருக்கிறார். #Samantha
செங்குன்றம், ஜி.என்.டி. சாலையில் தனியாரின் 5 மாடிகள் கொண்ட வணிக வளாகம் இன்று திறக்கப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக நடிகை சமந்தா, டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரியங்கா ஆகியோர் வந்தனர். இது பற்றி அறிந்ததும் ரசிகர்கள் ஏராளமானோர் கடை முன்பு திரண்டனர்.
காரில் இருந்து நடிகை சமந்தா இறங்கியதும் ரசிகர்களை பார்த்து உற்சாகத்தில் கையசைத்தார். அப்போது ஏராளமான ரசிகர்கள் முண்டியடித்து அருகில் செல்ல முயன்றனர்.
அவர்களை பாதுகாப்புக்கு வந்திருந்த தனியார் பாதுகாவலர்களும், போலீசாரும் தடுத்தனர். இதனால் திரண்டு இருந்த ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஜி.என்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் உருவானது. குறைவான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் ரசிகர்களை கட்டுப்படுத்த முடிய வில்லை. இதையடுத்து கூடுதல் போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்துக்கு பின்னர் நடிகை சமந்தாவும், டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரியங்காவும் அங்கிருந்து காரில் புறப்பட்டனர். இதன் பின்னர் ரசிகர்கள் கலைந்து சென்றனர். இதனால் ஜி.என்.டி. சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.