சினிமா

போராட்டங்கள் எதிரொலி - பட ரிலீசை தள்ளி வைத்தார் கார்த்திக் சுப்புராஜ்

Published On 2018-04-05 13:45 GMT   |   Update On 2018-04-05 13:45 GMT
தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வருவதால், தான் இயக்கிய ‘மெர்குரி’ படத்தின் டிரைலரையும், பட ரிலீசையும் தள்ளி வைத்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். #Mercury
ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் பென் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `மெர்குரி'. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் பிரபுதேவா, சனத் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன், மேயாத மான் இந்துஜா, அனிஷ் பத்மன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

வசனங்களே இல்லாத இந்த படம், ஒரு சைலண்ட் திரில்லராக உருவாகி இருக்கிறது. பின்னணி இசையின் மூலமே நகரும் இந்த படத்தில் பிரபுதேவா எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத் தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டதால் ‘மெர்குரி’ படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்ற குழப்பம் நிலவி வந்தது. இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் டிரைலர் இன்று வெளியாகும் என்றும், படம் ஏப்ரல் 13ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தார்.



இதனால், கார்த்திக் சுப்புராஜுக்கு பல எதிர்ப்புகள் கிளம்பியது. தமிழ் நாட்டில் தயாரிப்பாளர்கள் சங்கம் போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம், காவிரி மேலாண்மை போராட்டம் என பல போராட்டங்கள் நடந்து வருவதால், படத்தையும் டிரைலரையும் வெளியிட வேண்டாம் என்று பலரும் டுவிட்டரில் கருத்து தெரிவித்தார்கள்.

இதனால் எதிர்ப்பார்த்தபடி ‘மெர்க்குரி’ படத்தின் டிரைலர் வெளியாகவில்லை. தமிழ்நாட்டில் பல போராட்டங்கள் நடைபெற்று வருவதால், அதற்கு மதிப்பளித்து டிரைலரை இன்று வெளியிடவில்லை. மேலும், படத்தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் முடியும் வரை தமிழ் நாட்டில் படத்தை வெளியிடவில்லை என்று கார்த்திக் சுப்புராஜ் கூறியிருக்கிறார். #Mercury #PrabhuDeva
Tags:    

Similar News