சினிமா
தாய்ப்பால் கொடுப்பது போல் புகைப்படம் - பத்திரிகை மற்றும் மாடல் மீது வழக்கு
தாய்ப்பால் கொடுப்பது போல் புகைப்படம் போட்ட பத்திரிகை மீதும், அதற்கு மாடலாக போஸ் கொடுத்த மலையாள எழுத்தாளர் ஜிலு ஜோசப் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. #Breastfeeding
கிரிகலட்சுமி என்னும் மலையாள வார இதழ், பெண் தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படத்தை அட்டைப்படமாக போட்டு உள்ளது. அந்த அட்டைப்படத்தில் இருப்பது மலையாள எழுத்தாளர் ஜிலு ஜோசப்.
“பெண்களே... தாய்ப்பாலின் முக்கியத்துவத்தைக் கேரளாவில் பறைசாற்றுங்கள். தாய்ப்பால் கொடுப்பதை வித்யாசமாகப் பார்க்க வேண்டாம்...” என்று அந்த அட்டைப்படத்தின் கீழ் குறிப்பிடப்பட்டு உள்ளது.
கிரகலட்சுமி வார இதழின் அட்டைப்படத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் என இரு விதமான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. சமூக வலைதளத்தில் ‘இது துணிச்சலான முயற்சி’ என்று ஒரு சாரரும், ‘இது விளம்பரத்துக்காகச் செய்த தேவையில்லாத முயற்சி’ என்று ஒரு சாரரும் விமர்சித்து உள்ளனர்.
இந்த நிலையில் கிரிகலட்சுமி பத்திரிகைக்கு எதிராக வக்கீல் வினோத் மேத்யூ என்பவர் கேரளாவின் கொல்லம் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
பத்திரிகையின் பதிப்பாளர் மற்றும் எழுத்தாளர் ஜிலு ஜோசப்புக்கு எதிராகவும் அவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு மார்ச் 16ந்தேதி விசாரணைக்கு வருகிறது.