சினிமா
அறம் பட இயக்குநருடன் கைகோர்க்கும் ஜி.வி.பிரகாஷ்
அறம் படத்தை இயக்கிய கோபி நயினார் இயக்கத்தில் சமூக கருத்தை மையப்படுத்திய கதையில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
டார்லிங் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி தற்போது பிசியான நடிகராக வலம் வருகிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். அவரது நடிப்பில் திரையில் ஓடிக் கொண்டிருக்கும் நாச்சியார் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதுடன் ஜி.வி.பிரகாஷுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமாக உள்ளது.
இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் அடுத்ததாக அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் சமூக கருத்தை மையப்படுத்திய கதையில் நடிக்க இருப்பதாக ஜி.வி.பிரகாஷுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து இயக்குநர் கோபி நயினாரிடம் கேட்ட போது, இதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், எதுவும் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார்.
கோபி நயினார் அடுத்ததாக சித்தார்த்தை இயக்க இருக்கிறார். அந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த படத்தை முடித்த பிறகு ஜி.வி.பிரகாஷுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.