சினிமா

அதர்வாவுடன் மோதும் பாலிவுட் நடிகர்

Published On 2018-01-12 11:05 GMT   |   Update On 2018-01-12 11:05 GMT
‘செம போத ஆகாத’, ‘இமைக்கா நொடிகள்’ படத்தை அடுத்து, அதர்வா நடிக்க இருக்கும் புதிய படத்தில் பாலிவுட் நடிகருடன் மோத இருக்கிறார்.
அதர்வா நடிப்பில் தற்போது ‘செம போத ஆகாத’, ‘இமைக்கா நொடிகள்’ உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. இப்படங்கள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அடுத்ததாக ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் அதர்வா. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். தற்போது வில்லன் கதாபாத்திரத்தில் உபன் படேல் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 

இது குறித்து இயக்குனர் ஆர்.கண்ணன் பேசுகையில், ''இப்படத்தின் வில்லன் கதாபாத்திரம் மிகவும் வலுவான மற்றும் சவாலான ஒன்று. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க உபன் படேலை அணுகி அவரிடம் இப்படத்தின் கதையையும் அவரது கதாபாத்திரத்தையும் சொன்னேன். கதையை கேட்ட உடனேயே நடிக்க ஒப்புக்கொண்டார். அவருக்கு கதை அவ்வளவு பிடித்திருந்தது. நிறைய வில்லன் கதாபாத்திரங்கள் அவரை நோக்கி வந்துக்கொண்டிருப்பதாகவும் ஆனால் இந்த கதை தான் அவரை மிகவும் கவர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார். 



இந்த கதாபாத்திரத்திற்கு அவர் தான் மிகவும் பொருத்தம் என உறுதியாக நம்புகிறேன். இந்த படம் அவரை அடுத்த தளத்திற்கு நிச்சயம் கொண்டு செல்லும். அவரது இந்த கதாபாத்திரத்தின் தோற்றம் மற்றும் கெட் அப் ஆகியவை மிகவும் ப்ரத்யேகமாகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். கிளைமாக்ஸ் காட்சியில் கதாநாயகன் அதர்வாவுக்கு உபன் படேலுக்கு இடையில் நடக்கும் சண்டை காட்சி இப்படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக நிச்சயம் இருக்கும்'' என்றார்.

இந்த படத்தை 'மசாலா பிக்ஸ்' நிறுவனத்தின் சார்பில் ஆர்.கண்ணன் தயாரிக்கிறார்.. ஆர்.ஜே.பாலாஜி, சதிஷ் மற்றும் சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

ஜனவரி 19 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கவுள்ள இப்படம் 'அர்ஜுன் ரெட்டி' புகழ் ராதன் இசையில், பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவில் உருவாகவுள்ளது.
Tags:    

Similar News