அரசியலுக்கு வராமலும் சேவை செய்ய முடியும்: சந்தானம்
நடிகர் சந்தானம் நடித்துள்ள “சக்க போடு போடு ராஜா” ரிலீசாகியுள்ளது. மதுரையில் இந்த படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு நடிகர் சந்தானம் வந்தார். அவர் அங்கு படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களிடம் ‘படம் எப்படி இருக்கிறது?’ என்று கருத்து கேட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
“சக்க போடு போடு ராஜா” படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை சந்திக்கிறேன்.
கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரத்தில் மட்டுமே நடிப்பேன். காமெடி மூலம் ரசிகர்களுக்கு சமுதாய சிந்தனையை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கம்.
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அரசியலுக்கு வரக்கூடாது என்பது கிடையாது. நான் ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டேன். அரசியலில் எனக்கு ஆர்வம் இல்லை. அரசியலுக்கு வராமலும் பொது மக்களுக்கு சேவை செய்ய முடியும்.
நான் முறையாக வருமான வரி கட்டி வருகிறேன். அடுத்தடுத்து 3 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். டைரக்டர் செல்வராகவன் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறேன்.
வலைதளங்களில் திரைப்படங்கள் வெளியிடுவதை தடுப்பதில் தயாரிப்பாளர்களுக்கு, பொதுமக்களும் ஆதரவு கொடுக்க வேண்டும். அது போல் அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.