சினிமா
மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் எஸ்.ஜே.சூர்யா
ஸ்பைடர், மெர்சல் படத்தில் வில்லனாக நடித்து வந்த எஸ்.ஜே.சூர்யா, தற்போது மீண்டும் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.
இயக்குனராக இருந்து நடிகராக மாறியவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் நடித்த படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கவே பல படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தார். சமீபத்தில் மகேஷ் பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘ஸ்பைடர்’ படத்தில் வில்லனாக நடித்தார். மேலும் விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படத்திலும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்திருந்தார்.
இவ்விரு படங்களிலும், இவரது நடிப்பு அதிகம் பேசப்பட்டது, இந்நிலையில், தற்போது மீண்டும் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. ‘ஒருநாள் கூத்து’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நெல்சன் வெங்கடேசன் இயக்கும் புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வும் நடைபெற்று வருகிறது. இப்படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க இருக்கிறார்.
ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கிறார்கள். மேலும், விரைவில் இறுதி செய்யப்பட்ட படக்குழுவினரையும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளார்கள்.