சினிமா

நடிகை கடத்தில் வழக்கில் திலீப்புக்கு எதிராக குவியும் புதிய ஆதாரங்கள்: சிக்கலில் திலீப்

Published On 2017-09-21 07:15 GMT   |   Update On 2017-09-21 07:15 GMT
நடிகை கடத்தல் வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை அக்டோபர் 7-ந் தேதிக்குள் தாக்கல் செய்யப்படுகிறது. மேலம் திலீப்புக்கு எதிராக புதிய ஆதாரங்கள் இணைக்கபடுவதாக கூறப்படுகிறது.
கேரளாவில் ஓடும் காரில் பிரபல நடிகையை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கில் பிரபல ரவுடி பல்சர் சுனில் மற்றும் அவனது கூட்டாளிகள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். பல்சர் சுனில் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஆலுவா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். நடிகர் திலீப்பின் ஜாமீன் மனுவும் 4 முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அவர் 5-வது முறையாக தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு வருகிற 28-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.

இந்த வழக்கில் ஏற்கனவே நடிகர் திலீப் மீது அங்கமாலி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளனர். அதன் பிறகு போலீசார் இந்த வழக்கு தொடர்பாக நடிகை காவ்யா மாதவன், டைரக்டர் நாதிர்ஷா உள்பட பலரிடமும் விசாரணை நடத்தி இந்த வழக்கில் முக்கிய தகவல்களை திரட்டி உள்ளனர்.

இதன் அடிப்படையில் நடிகர் திலீப் மீது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். வருகிற 7-ந்தேதி அங்கமாலி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இந்த குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இந்த வழக்கில் முக்கிய சாட்சியமாக நடிகை பலாத்கார காட்சி அடங்கிய மெமரிக்கார்டு உள்ளது. அதை இன்னும் போலீசார் கைப்பற்றவில்லை. அது பற்றிய முக்கிய தகவலை கூடுதல் குற்றப்பத்திரிகையில் போலீசார் தெரிவிக்க உள்ளனர்.

மேலும் திலீப் மீதான குற்றச்சாட்டுக்கு கூடுதல் ஆதாரங்களும் அது தொடர்பான சாட்சியங்களையும் அதில் போலீசார் இணைக்க உள்ளனர். இதனால் இந்த வழக்கில் மீண்டும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது.

பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் நடிகர் திலீப் ஆகியோருக்கு ஆதரவாகவும், எதிராகவும் மலையாள திரையுலகைச் சேர்ந்தவர்களும் அரசியல் தலைவர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதனால் இந்த விவகாரத்தில தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

பூஞ்சார் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான பி.சி. ஜார்ஜ் ஏற்கனவே நடிகர் திலீப்புக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அவரது மகன் ஷோன் ஜார்ஜும் பேஸ்புக்கில் நடிகர் திலீப்புக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், பேஸ்புக்கில் கூறி இருப்பதாவது:-



நடிகை கடத்தல் வழக்கில் நடிகைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற ஆர்வத்தை விட நடிகர் திலீப்பை ஜெயிலில் கம்பி எண்ண வைக்க வேண்டும் என்ற ஆர்வம்தான் அதிகமாக காணப்படுகிறது. நடிகர் திலீப் மீது கூறிய குற்றச்சாட்டு, அவர் நடிகை கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்டார் என்பதுதான்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை நிரூபிக்கும் முக்கியமான தடயம் கடத்தப்பட்ட நடிகையை பலாத்காரம் செய்து செல்போனில் படம் பிடித்த காட்சி பதிவான மெமரி கார்டுதான். ஆனால் இதுவரை அதை போலீசார் கைப்பற்றவில்லை.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனிலுக்கும் போலீசாருக்கும் தொடர்பு உள்ளது. அதனால்தான் இதுவரை மெமரி கார்டை அவர்கள் கைப்பற்றவில்லை. எனவே நடிகர் திலீப் கைது பின்னணியில் சதி உள்ளது என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நடிகர் திலீப்பை சில நாட்களாவது ஜெயிலில் வைக்க வேண்டும் என்பதையே ஆரம்பத்தில் இருந்து கவனத்தில் கொண்டு செயல்பட்டு வந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News