சினிமா

கமலைப்போல் சிபிராஜுக்கு சத்யா திருப்புமுனையாக இருக்கும்: பிரதீப் கிருஷ்ணமூர்த்தி நம்பிக்கை

Published On 2017-05-24 07:44 GMT   |   Update On 2017-05-24 07:44 GMT
கமலுக்கு சத்யா திருப்புமுனையாக அமைந்ததுபோல் சிபிராஜுக்கு இந்த சத்யா திருப்புமுனையாக இருக்கும் என்று இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி, ஆனந்த்ராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘சத்யா’. இப்படத்தை ‘சைத்தான்’ படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி வருகிறார். நாதாம்பாள் பிலிம் பேக்டரி நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படம் குறித்து இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமர்த்தி மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறும்போது, ‘சத்யா’ என்ற தலைப்பே மிகவும் பவர்புல்லான ஒரு தலைப்பு. கமல்ஹாசன் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘சத்யா’. கமல் சாருக்கும் ‘சத்யா’ அவருடைய கேரியரில் திருப்புமுனை படமாக அமைந்தது. அதேபோல் இந்த ‘சத்யா’ சிபிராஜுக்கு அவருடைய கேரியரில் நிச்சயம் திருப்புமுனை படமாக இருக்கும்.



‘சத்யா’ படத்தின் தலைப்பு ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரில் பதிவாகி இருந்தது. கமல் சாரிடம் நாங்கள் இந்த தலைப்பு எங்கள் படத்துக்கு சரியாக இருக்கும் என்று கேட்டவுடன் எங்களுக்கு ‘சத்யா’ என்ற மாஸ் தலைப்பை கையெழுத்திட்டு கொடுத்தார். அவருக்கு என்னுடைய சார்பாகவும் எங்களுடைய யூனிட்டின் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

கிரைம் த்ரில்லர் பாணியில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாக்கியுள்ள ‘சத்யா’ தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘ஷணம்’ திரைப்படத்தின் ரீமேக்தான். தமிழுக்காக கதையில் புதிதாக நிறைய விஷயங்களை சேர்த்து உருவாக்கியுள்ளோம். படத்தில் கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். வரலக்ஷ்மி சரத்குமார் போலீஸ் அதிகாரியாகவும், ஆனந்த் ராஜ் மற்றும் சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.  இதில் வரலக்ஷ்மியின் கதாபாத்திரம் படத்துக்கு பலம் சேர்க்கும் ஒன்றாகும்.



இதுவரை சிபிராஜ் 12 படங்களில் நடித்துள்ளார். அவருடைய லுக்கை மாற்றி புதிதாக காட்ட வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையாக இருந்தது. இதை நான் அவரிடம் கூறியதும், நிச்சயமாக நீங்கள் என்ன சொன்னாலும் செய்யலாம் என்று சிபிராஜும் முன்வந்தார். இந்த லுக்குக்காக நேரமெடுத்து காத்திருந்து படப்பிடிப்புக்கு சென்​றோம்.

இந்த கதைக்கு தேவை என்று நான் கேட்ட நடிகர்கள் எல்லோரையும் சிபிராஜ் எனக்கு கொடுத்துள்ளார். ரம்யாவுக்கு இப்படம் பெரிய பெயர் வாங்கி தரும். இப்படத்தை வர்தா புயல் வந்த அன்று கூட படமாக்கினோம். அன்று நாங்கள் அம்பத்தூரில் உள்ள ஒரு இடத்தில் செட் போட்டு படமாக்கிக் கொண்டிருந்தோம். புயல் அடித்த பின்பு தான் வெளியே வரமுடியும் என்பதால் நாங்கள் உள்ளேயே தான் இருந்தோம். புயல் வரப்போகிறது என்று தெரியும் ஆனால் இவ்வளவு பெரிய புயலாக இருக்கும் என்று தெரியாது.



இந்த படம் மிக சிறந்த கமர்ஷியல் படமாக இருக்கும் என்று நிச்சயமாக கூறமுடியும். எனக்கு கமர்ஷியல் திரைப்படம் எடுக்க தெரியாது என்று நினைத்து கொண்டிருந்தேன். படத்தை இப்போது பார்க்கும்போது இது என்னை ஊக்குவிக்கும் வகையில் வந்துள்ளது. படத்தின் கதைபடி கிரைம் ஒன்று நடக்கும், அப்படி அது நடக்கும் போது எப்போதும் அது போலீஸின் பார்வையில் செல்வது போல் தான் கதை இருக்கும். ஆனால் இந்த கதை ‘சத்யா’ என்ற சாதாரணமான ஒரு நபரின் பார்வையில் செல்வது போல் இருக்கும். குழந்தை ஒன்று காணாமல் போனதில் இருந்து அதை கண்டுபிடிப்பது வரை செல்லும் இந்த கதை மிகவும் விறுவிறுப்பாக நகரும் என்றார்.
Tags:    

Similar News