சினிமா

தெர்மாகோல் விஷயத்தை பொதுமேடையில் கலாய்த்த கமல், ராதாரவி

Published On 2017-04-24 13:38 GMT   |   Update On 2017-04-24 13:38 GMT
சமீபத்தில் அமைச்சர் ஒருவர் அறிமுகப்படுத்திய தெர்மாகோல் திட்டத்தை கிண்டலடித்து கமல், ராதாரவி ஆகியோர் பேசியுள்ளனர். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
சமீபத்தில் அமைச்சர் ஒருவர் ஆற்று நீர் ஆவியாவதை தடுப்பதற்கு தெர்மாகோல் வைத்து ஆற்று நீரை மூடியதுதான் தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாக போய்க் கொண்டிருந்தது. அந்த திட்டத்தை கிண்டல் செய்து ஏகப்பட்ட மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நடந்த ‘சங்கிலி புங்கிலி கதவத்தொற’ படத்தின் ஆடியோ வெளியீட்டிலும் இந்த தெர்மாகோல் விஷயம் பேசப்பட்டது. இப்படத்தின் ஆடியோவை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார். பின்னர், அவர் பேசும்போது, இப்படத்தின் டிரைலரை நான் ஏற்கெனவே பார்த்துவிட்டேன் என்பதில் பெருமை.



இன்னும் ஒரு பெருமை என்னவென்றால், எனக்கு ரொம்பவும் தெரிந்தவர்கள், என்னுடன் வேலை பார்த்தவர்கள் எல்லோரும் இந்த படத்துல இருக்கிறார்கள் என்பதுதான். இந்த டிரைலரை பார்க்கும்போதே இப்படத்தில் அனைத்து அம்சங்களும் இடம்பெற்றிருக்கும் என்று சொல்லாம். இப்படம் ஆவிகளை பற்றிய படம். ஆனால் இந்த ஆவிக்கு தெர்மாகோல் தேவையில்லை என்று பேசினார். கமலின் இந்த பேச்சால் அரங்கமே சிரிப்பால் அதிர்ந்தது.

அவரைத் தொடர்ந்து ராதாரவி பேசும்போது, கமல் சமீபகாலமாக அரசியல் பேசி வருகிறார். மற்றவர்களைப்போல் நான் டுவிட்டரில் அரசியல் பேசுபவன் அல்ல, நேரடியாகவே பேசுபவன். சமீபத்தில் அமைச்சர் ஒருவர் தெர்மாகோலை வைத்து ஆற்றை மூடி ஆவி வெளியேறாமல் தடுக்க முயன்றார். அம்மா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது தெர்மாகோலை அவர்மீது போட்டிருந்தால் அவருடைய ஆவி வெளியேறாமல் இருந்திருக்குமே? என்று நையாண்டியாக பேசினார்.

இப்படியாக ஆடியோ வெளியீட்டில் தெர்மாகோல் விஷயத்தை நடிகர்கள் போட்டி போட்டு பேசியது அங்கிருந்த ரசிகர்களை மேலும் கலகலப்பாக்கியது.

Similar News