சினிமா

தனுஷ் எங்கள் மகன் தான்: மேல்முறையீடு செய்ய மேலூர் தம்பதி முடிவு

Published On 2017-04-21 10:48 GMT   |   Update On 2017-04-21 10:49 GMT
தனுஷ் தங்கள் மகன் என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்த மேலூர் தம்பதிகளின் மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் மேல் முறையீடு செய்யவிருக்கிறார்களாம்.
நடிகர் தனுஷ் தங்கள் மகன் தான் என்று மேலூர் தம்பதி கதிரேசன்-மீனாட்சி ஆகியோர் தொடர்ந்த வழக்கில் இன்று மதுரை ஐகோர்ட்டு கிளை அவர்களது மனுவை தள்ளுபடி செய்து தனுசுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பு குறித்து கதிரேசன்-மீனாட்சி கூறியதாவது:-

11 வயதில் வீட்டை விட்டு வெளியேறிய கலைச்செல்வன் தான் நடிகர் தனுஷ். அதற்கான அனைத்து ஆவணங்களும், சான்றிதழ்கள் எங்களிடம் உள்ளது. ஆனால் நடிகர் தனுஷ் தரப்பில் போலியான சான்றிதழ்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.


எங்களுக்கு ஆதரவாக நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். கிடைக்கவில்லை. ஆனாலும் நடிகர் தனுஷ் தான் எங்கள் மகன். அதை நிரூபிப்பதற்கு டி.என்.ஏ. பரிசோதனைக்கு தயாராக இருந்தோம்.

ஆனால் அந்த வாய்ப்பை மதுரை ஐகோர்ட்டு கிளை எங்களுக்கு வழங்காதது துரதிருஷ்டவசமானது. இறுதி வரை போராடி தனுஷ் எங்கள் மகன் என்பதை நிருபிப்போம். அதற்காக விரைவில் மேல் முறையீடு செய்ய இருக்கிறோம். நிச்சயம் நீதி ஒருநாள் வெல்லும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Similar News