சினிமா

வடசென்னை படம் தாமதமாவது ஏன்?: வெற்றிமாறன் விளக்கம்

Published On 2017-04-18 08:00 GMT   |   Update On 2017-04-18 08:01 GMT
வடசென்னை படம் ஏன் காலதாமதமாகிறது என்பது குறித்து வெற்றிமாறன் விளக்கம் அளித்துள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘வடசென்னை’. இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துவருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இப்படத்தை வெற்றிமாறனும், தனுஷும் சேர்ந்து தயாரித்து வருகிறார்கள். லைக்கா நிறுவனம் இப்படத்தை வெளியிடவிருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே திடீரென நிறுத்தப்பட்டது. இதையடுத்து தனுஷும் ‘ப.பாண்டி’, ‘வேலையில்லா பட்டதாரி 2’ ஆகிய படங்களில் செயல்பட ஆரம்பித்தார். இதனால் ‘வடசென்னை’ படம் டிராப் ஆனதா? என்று பல்வேறு தரப்பிலும் கேள்விகள் எழுந்தன. மேலும் இதற்கான காரணமும் என்னவென்பது தெரியாமல் இருந்துவந்தது.



இந்நிலையில், இந்த படம் எதற்காக நிறுத்தி வைக்கப்பட்டது என்பது குறித்து வெற்றிமாறன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘வடசென்னை’ படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது ‘விசாரணை’ ஆஸ்கர் பரிந்துரைக்காக தயாராக வேண்டிய சூழ்நிலை இருந்தது. அதற்காக நேரம் வேண்டும் என்று தனுஷிடம் கேட்டேன். வேறெந்த தயாரிப்பாளராக இருந்தாலும் இதற்கு அனுமதித்திருக்க மாட்டார். ஆனால், தனுஷ் பெருந்தன்மையாக இதற்கு ஒத்துக்கொண்டார் என்றார். ஆகையால், இதனால்தான் ‘வடசென்னை’ படம் மீண்டும் தொடங்குவதற்கு காலதாமதம் ஆகியுள்ளதாக வெற்றிமாறன் கூறியுள்ளார்.

‘வடசென்னை’ படம் தனுஷ் நடிப்பிலேயே அதிக பொருட்செலவில் உருவாகவிருக்கும் படமாம். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புக்கான செலவு மட்டும், ‘விசாரணை’ படத்திற்கு ஆன முழு செலவையும் தாண்டிவிட்டதாகவும் கூறுகின்றனர். விரைவில், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் படக்குழு தரப்பிலிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar News