சினிமா

நடிகர்-நடிகைகளின் முகப்பு படங்களை வைத்து அவதூறு பரப்புவதா?: சுருதிஹாசன் கண்டனம்

Published On 2017-04-17 06:22 GMT   |   Update On 2017-04-17 06:22 GMT
டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சிலர் தங்கள் படங்களுக்கு பதிலாக நடிகர்-நடிகைகளை முகப்பு படங்களாக வைத்து அவதூறு பரப்பும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று நடிகை சுருதிஹாசன் கண்டனம் தெரிவித்தார்.
இதுகுறித்து நடிகை சுருதிஹாசன் அளித்த பேட்டி வருமாறு:-

“நடிகர்-நடிகைகளின் பின்புலங்கள், அவர்கள் நடித்துள்ள படங்கள், அவர்களின் திறமைகள் போன்ற எதுவும் தெரியாமலேயே சிலர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள். அவதூறுகளும் பரப்புகிறார்கள். இதற்கு முக்கியத்துவம் கொடுக்க கூடாது என்பது எனது கருத்து. நம்மை பற்றி தெரிந்தவர்கள் விமர்சனம் செய்தால் மட்டுமே அதனை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும்.

நான் சமூக வலைதளமான ‘டுவிட்டர்’ மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறேன். நான் நடித்து வரும் படங்கள் பற்றிய விவரங்களையும் இனிமேல் நடிக்கப்போகும் படங்கள் சம்பந்தமான தகவல்களையும் டுவிட்டரில் வெளியிட்டு ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி வருகிறேன். சினிமா அல்லாத பொதுவிஷயங்கள் குறித்தும் எனது கருத்துக்களை அவ்வப்போது அதில் பகிர்ந்து கொள்கிறேன்.



ஆனால் எந்த டுவிட்டர், ரசிகர்களுடன் என்னை தொடர்பில் வைத்து இருக்கிறதோ அதன்மூலம் சில கஷ்டங்களையும் சந்திக்க நேர்கிறது. சமூக ஊடகங்கள் நல்ல விஷயம்தான். அதன்மூலம் அனைத்து தரப்பு மக்களுடனும் தொடர்பு கொள்ள முடிகிறது. நிறைய விமர்சனங்களும் அதில் பரவுகிறது. தனிப்பட்ட முறையில் ஒருவரின் சொந்த வாழ்க்கை பற்றியும் அதில் அவதூறுகள் பரப்பப்படுவதுதான் வேதனை அளிக்கிறது.

சிலருக்கு அவர்களின் சொந்த வாழ்க்கையில் அதிருப்தி இருக்கும். அப்படிப்பட்டவர்கள் பக்கத்தில் இருப்பவர்களை குறை சொல்லி ஆனந்தப்படுவார்கள். டுவிட்டரிலும் அதைத்தான் அவர்கள் செய்கிறார்கள். இவர்கள் டுவிட்டர் முகப்பில் கூட தங்கள் படங்களை வைத்துக்கொள்ளாமல் நடிகர்-நடிகைகளின் படங்களை வைத்துக்கொள்கிறார்கள்.

மற்றவர்கள் மீது அவதூறு பரப்புவதற்கும் விமர்சிப்பதற்கும் கூட அவர்களுக்கு நடிகர்-நடிகைகளின் முகப்பு படங்கள்தான் தேவைப்படுகிறது. தங்களுடையை சொந்த படங்களை டுவிட்டர் முகப்பில் வைத்துக்கொள்ள பயப்படுகிறார்கள். இப்படிப்பட்டவர்களின் வெட்டித்தனமான விமர்சனங்களுக்கும் அவதூறுகளுக்கும் முக்கியத்துவம் அளித்து நேரத்தை யாரும் விரயம் செய்யக்கூடாது. விமர்சனங்களுக்கு பயந்து சமூக வலைதளத்தில் இருந்து நான் ஒருபோதும் விலக மாட்டேன்.

இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.

Similar News