சினிமா

தேசிய விருதுகள் வழங்கப்பட்டதில் பாரபட்சமா?: கே.ஜே.ஜேசுதாஸ் பேட்டி

Published On 2017-04-17 05:55 GMT   |   Update On 2017-04-17 05:56 GMT
தேசிய விருதுகள் வழங்கப்பட்டதில் பாரபட்சம் காட்டப்படுகிறதா? என்பதற்கு பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் பதில் அளித்தார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
கோவை சித்தாபுதூர் பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் நடந்த அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைக்க பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் நேற்று காலை கோவை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எனக்கு பத்ம விபூஷண் விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கடவுள் அருளால் எனக்கு இது கிடைத்து உள்ளது. இதற்காக நான் அதிகம் சந்தோஷம் அடைவதில்லை. மற்ற விருதுகளை பெற்றால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவேனோ அதைப்போலவே இந்த விருதையும் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடவுள் அருளால் அனைத்தும், அனைவருக்கும் கிடைக்கும்.

நாம் மற்றவர்களுக்கு உதவி செய்வதை குறிக்கோளாக கொண்டிருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



பின்னர் அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- 2016-ம் ஆண்டு திரைப்படங்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டதில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், வேண்டியவர்களுக்கு மட்டும் விருதுகள் வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?

பதில்:- இந்த கேள்வியை குற்றச்சாட்டை எழுப்பியவர்களையும், தேசிய விருதுகள் வழங்கியவர்களையும் போய் கேளுங்கள்.

கேள்வி:- இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை மேடைகளில் பாடக்கூடாது என்று எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பியுள்ளாரே? அதுபற்றி உங்கள் கருத்து என்ன?.

பதில்:- நான் யாருக்கும் வக்கீல் நோட்டீசு அனுப்பவில்லை. வக்கீல் நோட்டீசு அனுப்பியவரை போய் கேளுங்கள்.

இவ்வாறு கூறி விட்டு கே.ஜே.ஜேசுதாஸ் வேகமாக எழுந்து சென்று விட்டார்.

Similar News