சினிமா

அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளதா?: நடிகர் பிரபு பேட்டி

Published On 2017-04-13 07:35 GMT   |   Update On 2017-04-13 07:35 GMT
அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளதா? என்ற நிருபர்களின் கேள்விக்கு நடிகர் பிரபு அளித்த பேட்டியை பார்க்கலாம்.
நடிகர் பிரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்னுடைய தந்தை சிவாஜி கணேசன் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார்கள். அதிகமான மன்றங்களை தொடங்கி பெருமை சேர்த்தனர். அவர் நாடகம் நடித்த காலத்தில் நெல்லைக்கு அதிக முறை வந்திருந்தார். நானும் பலமுறை தந்தையுடன் நெல்லைக்கு வந்துள்ளேன். அவரது கையைப்பிடித்து நெல்லை வீதிகளில் வலம் வந்தது இப்போதும் நினைவில் இருக்கிறது.

தாமிரபரணி சினிமா படப்பிடிப்புக்கு நெல்லைக்கு நான் வந்த போது இங்குள்ள மக்கள் சிவாஜியுடன் பழகிய நிகழ்வுகளை நினைவு கூர்ந்தனர். மேலும் சிவாஜி புரெடக்‌ஷன்ஸ் சார்பில் அடுத்த படம் விரைவில் தயாரிக்கப்படும். கமல் ஹாசனுடன், வெற்றி விழா 2-வது பாகம் தற்போது உருவாகும் திட்டம் இல்லை.



இதற்கிடையே தற்போதைய சூழ்நிலையில் நீங்கள் அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளதா? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று பிரபு நிருபர்களை பார்த்து பதில் கேள்வி கேட்டார். அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

அதன் பிறகு பிரபு, என்னுடைய தந்தை சிவாஜி காலத்தில் இருந்தே எனக்கு அரசியல் மீது ஆர்வம் கிடையாது. ஆனால் இந்திய குடிமகனாக அரசியல் நிலவரத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் இன்றைய தமிழக அரசியல் நிலவரம் குறித்து கருத்து கூறுங்கள் என்று கேட்டதற்கு, எல்லாம் நன்மைக்கே. இது தொடர்பாக மேலும் கேட்க வேண்டாம் என்று நகைச்சுவையுடன் பேட்டியை நிறைவு செய்தார்.

பேட்டியின் போது பிரபு ரசிகர் மன்ற நெல்லை மாவட்ட தலைவர் பாலசந்தர், தூத்துக்குடி மாவட்ட தலைவர் குமாரமுருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News