சினிமா

விஜய் பட பாணியில் நடந்த உண்மை சம்பவம்

Published On 2017-04-11 10:42 GMT   |   Update On 2017-04-11 10:43 GMT
விஜய் நடித்த ‘நண்பன்’ பட பாணியில் உண்மையான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அது என்னவென்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
விஜய் நடித்த ‘நண்பன்’ படத்தில் சத்யராஜின் மகளான அனுயா பிரசவ வலியால் துடிக்க, அங்கிருந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத சூழ்நிலையில், கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயே இருந்துகொண்டு, அங்கிருந்து வெப் கேமரா மூலம் மருத்துவரின் ஆலோசனை பெற்று அந்த குழந்தையையும், அம்மாவையும் காப்பாற்றுவார்கள்.

இந்த காட்சி போன்று தற்போது உண்மையான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கடந்த ஏப்ரல் 7-ந் தேதி நாக்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு பயின்று வரும் விபின் காட்சே என்ற மாணவன் அகமதாபாத்தில் இருந்து புரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்துவந்தார்.



அப்போது, அதே பெட்டியில் வந்த ஒரு பெண் பிரசவ வேதனையால் துடிதுடித்துக் கொண்டிருந்தார். துரதிருஷ்டவசமாக அந்த பெட்டியில் பெண் டாக்டர்களோ, பிரசவம் பார்க்கும் மருத்துவச்சிகளோ யாரும் இல்லாததால் வலியால் துடிக்கும் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்க்க விபின் முன்வந்தார்.

அனுபவம் இல்லாத விபின், வாட்ஸ் அப்பில் தனது டாக்டர் நண்பர்களின் ஆலோசனை கேட்டு, அவர்களின் அறிவுரையின்படி அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். அந்த பெண்ணும் அழகான ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.  சமயோஜிதமாக செயலாற்றி தாய்-சேய் இருவரின் உயிரையும் காப்பாற்றிய விபினுக்கு, அந்த பெண்ணின் உறவினர்கள் நன்றியுடன் பாராட்டும் தெரிவித்தனர்.

Similar News