சினிமா

திருட்டு விசிடியை ஒழிப்பதற்குமுன் நல்ல படங்களை எடுங்கள்: திரையுலகினருக்கு பாக்யராஜ் வேண்டுகோள்

Published On 2017-04-11 06:53 GMT   |   Update On 2017-04-11 06:53 GMT
திருட்டு விசிடியை ஒழிப்பதற்கு முன் நல்ல படங்களை எடுங்கள் என்று இயக்குனர் பாக்யராஜ் திரையுலகினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரோஜா மாளிகை’ படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் கே.பாக்யராஜ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசும்போது,

திருட்டு விசிடியால் சினிமாவுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பது 10 சதவீதம்தான். ஆனால், நாம் நல்ல படம் எடுக்கவேண்டும் என்பதுதான் இங்கு முக்கியம். சமீபத்தில் வெளிவந்த ‘மாநகரம்’, ‘எட்டு தோட்டாக்கள்’ படங்கள் பெரிய நடிகர்கள் இல்லாவிட்டாலும் பேசப்படுகிறது என்றால் நல்ல கதைகள்தான் அதற்கு காரணம்.

தயாரிப்பாளர் சங்கத்திற்கு புதிய அணி தேர்வாகியிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் பிடித்துப்போய் யாரும் தேர்வு செய்யவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் நிறைய பிரச்சினை இருக்கிறது. அதை நீங்களாவது சரிசெய்வீர்கள் என்பதற்காகத்தான் உங்களுக்கு ஓட்டு போட்டு தேர்வு செய்திருக்கிறார்கள்.



திரையரங்கு உரிமையாளர்கள் பெரிய படத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் சிறிய பட்ஜெட் படங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கவேண்டும். புதிய நடிகர்களின் படங்களுக்கு காலை காட்சி கொடுத்தால்  அவர்களுக்கு பெரிய அளவில் பலன் இருக்காது. பெரிய நடிகர்களின் படங்களுக்கு காலைக் காட்சி கொடுத்தால்கூட அவர்களுக்காக ரசிகர்கள் படம் பார்க்க வருவார்கள். ஆனால் புதிய நடிகர்களுக்கு அப்படியில்லை, அவர்களின் படங்களுக்கு மாலைக் காட்சிகள் கொடுத்தால்தான் பயனுள்ளதாக இருக்கும்.

நான் யாருக்கும் கதை சொல்லி சினிமாவுக்குள் வரவில்லை. நான் யாருக்கும் கதை சொல்ல மாட்டேன். என்மேல் நம்பிக்கை இருந்தால் படம் பண்ணலாம் என்பதை முதலிலேயே சொல்லிவிடுவேன். கதை விவாதத்தின் போது தயாரிப்பாளர் உள்ளே வந்து எட்டிப்பார்ப்பது எனக்கு பிடிக்காது. தயாரிப்பாளர் விழுந்துவிட்டால் அவரை காப்பாற்றிவிடுவதற்கு இன்னொரு இயக்குனர் கிடைப்பார். ஆனால், ஒரு இயக்குனர் விழுந்துவிட்டால், அவரே தானாகத்தான் எழுந்துவரவேண்டும். இதுதான் அதற்கு காரணம்.

இவ்வாறு அவர் பேசினார். 

Similar News