சினிமா

சமுதாய உணர்வை புண்படுத்தியதாக வழக்கு: ராக்கி சாவந்த் தலைமறைவு

Published On 2017-04-05 05:15 GMT   |   Update On 2017-04-05 05:15 GMT
சமுதாய உணர்வை புண்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் போலீசார் மும்பையில் தேடிய போது இந்தி நடிகை ராக்கி சாவந்த் தலை மறைவானார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, ராமாயணத்தை இயற்றிய வால்மீகி முனிவர் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்து தெரிவித்தார்.

இதன் காரணமாக சமுதாய உணர்வை புண்படுத்தியதாக கூறி, அவர் மீது பஞ்சாப் மாநிலம் லூதியானா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, நேரில் ஆஜராகுமாறு ராக்கி சாவந்துக்கு பல முறை கோர்ட்டு உத்தரவிட்டும் அவர் ஆஜராகவில்லை.



இதைத்தொடர்ந்து, அவருக்கு எதிராக கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, ராக்கி சாவந்தை கைது செய்வதற்காக இரண்டு போலீசார் லூதியானாவில் இருந்து மும்பை வந்தனர். மும்பையில் அவரது வீட்டில் அவரை காணவில்லை. அவர் தலை மறைவானது தெரியவந்தது.

இதனால், ராக்கி சாவந்தை கைது செய்யும் போலீசாரின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதுபற்றி கோர்ட்டில் தெரியப்படுத்துவோம் என்று லூதியானா துணை போலீஸ் கமிஷனர் கூறினார்.

ராக்கி சாவந்த் மீதான வழக்கு வருகிற 10-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News