சினிமா

விவசாயிகளை காப்பாற்ற இளைஞர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்: இயக்குனர் தங்கர்பச்சான் பேச்சு

Published On 2017-03-25 05:33 GMT   |   Update On 2017-03-25 05:33 GMT
விவசாயிகளை காப்பாற்ற இளைஞர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும் என்று ஈரோட்டில் கல்லூரி விழாவில் பேசிய இயக்குனர் தங்கர்பச்சான் தெரிவித்தார். இதுகுறித்த அவர் அளித்த முழுபேட்டியை கீழே பார்க்கலாம்.
விவசாயிகளுக்காக இளைஞர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும் என்று சினிமா இயக்குனர் தங்கர்பச்சான் பேசினார்.

மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்த கலைவிழாவில் இயக்குநர் தங்கர்பச்சான் கலந்து கொண்டு பேசியதாவது:-

நமது வாக்குரிமையின் வலிமையை உணராத காரணத்தால் தவறானவர்கள் நம்மை ஆளும் நிலை ஏற்பட்டது. அரசியல் வேண்டாம்  என்று திறமையான, தகுதியான இளைஞர்கள் பலர் ஒதுங்கியதே இதற்கு காரணமாகும்.

பொருள்தேடும் கல்வியை மட்டுமே கற்றுத்தருவதால் திறமையான பலர் வெளிநாடுகளில் வேலைக்கு சேர்ந்து சுகமாக வாழ்கிறார்கள்.  அவர்களுக்கு தாய்மண் குறித்த கவலை ஏதும் இல்லை. சொகுசு வாழ்க்கையை மட்டும் விரும்பும் அவர்கள், போராட்டங்களில் இருந்து  தப்பிக்கவே முயற்சிக்கின்றனர்.



எனவே மாணவர்களுக்கு வாழ்வியல் கல்வியும், அரசியல் கல்வியும் அவசியமாகும். அந்த காலங்களில் மாணவர்கள் நலனுக்காக  ஆசிரியர்கள் போராடினார்கள். ஆனால் தற்போது ஆசிரியர்கள் ஊதிய உயர்வு போன்ற சுய தேவைகளுக்காக போராடுகின்றனர்.

கல்வி கற்பிப்பது ஒரு தொண்டு என்ற நிலையில் இருந்து, அது ஒரு தொழில் என்ற நிலையை அடைந்ததே இதற்கு காரணமாகும்.

தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அரசியல் பேச  வைத்தது. அந்த நிலை தொடர வேண்டும். ஜல்லிக்கட்டு காளைகளை காப்பாற்றியதோடு நமது கடமை முடிந்தது என்று இளைஞர்கள்  இருக்கக் கூடாது.



தற்போது விவசாயிகள் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்காகவும் இளைஞர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும். அடுத்த 20  ஆண்டுகளுக்குள் விவசாயம் அழிந்துவிடும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை  இளைஞர்களுக்கு உண்டு.

விவசாயத்தை அடுத்த தலைமுறையினர் கையில் எடுத்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News