சினிமா

எத்தனை வெற்றி கொடுத்தாலும் பணிவுடன் இருப்பவர் விஜய்சேதுபதி: டி.ராஜேந்தர்

Published On 2017-03-24 16:15 GMT   |   Update On 2017-03-24 16:15 GMT
எத்தனை வெற்றி கொடுத்தாலும் விஜய்சேதுபதி பணிவுடனே இருப்பவர் என்று இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்த முழுபேட்டியை கீழே பார்ப்போம்.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டி.ராஜேந்தர், மடோனா செபாஸ்டியன் நடித்துள்ள படம் ‘கவண்’. ஹிப்ஹாப் தமிழா ஆதி  இசை அமைத்துள்ள இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இதில் பேசிய டி.ராஜேந்தர்....

‘கவண்’ படத்தில் நான் நடிக்க காரணம் கே.வி.ஆனந்த் தான். அவர் எனக்கு மிகவும் பிடித்தமான கேமரா மேன். ஒளிப்பதிவில் தனி  முத்திரை பதித்தவர், ஒரே நிறுவனத்துக்கு 3 படம் எடுக்கும் அளவு தயாரிப்பாளர் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.



கதை தான் எனது ஹீரோ. நடிக்கும் ஹீரோ அடுத்தது என்று சொல்வது கே.வி.ஆனந்தின் தன்நம்பிக்கை. என்னை தேடி வந்து கதை  சொன்னார். நான் தயங்கினேன். வெளியே யாருடைய படத்திலும் நடிக்க மாட்டேன் என்று கூறினேன்.

உங்கள் மரியாதை கெடாமல் உங்களுக்கு முழு சுதந்திரம் கொடுப்பேன். என் மீது நம்பிக்கை இருந்தால் நடியுங்கள் என்றார். அந்த  வார்த்தை எனக்கு மிகவும் பிடித்தது. நான் பல படங்கள் தயாரித்திருக்கிறேன். ஆனால் ஏ.வி.எம். அழைத்தும் அவர்களுக்கு நான் ஒரு  படம் பண்ணியது இல்லை. இதில் நடித்தேன்.



ஒரு படத்தில் நடித்தாலே தலையை தூக்கிக்கிட்டு போகிற காலத்திலே, எத்தனை வெற்றி கொடுத்தாலும் பணிவுடன் இருக்கக்கூடிய  நடிகர் விஜய்சேதுபதி.

அவருடன் நடிக்கும் போது எனக்கு மிகவும் சவுகரியமாக இருந்தது. கோடியுள்ள மனிதனை மதிக்கிறவன் இல்லை இந்ததாடி. லட்சம்  கோடி இருந்தாலும் நான் பேசுறதை தான் பேசுவேன். அது தான் என் சுவாபம்” என்றார்.

நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி,கே.வி.ஆனந்த் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

Similar News