சினிமா

செல்ஃபி கேட்ட ரசிகருக்கு கவுண்டமணி கொடுத்த பஞ்ச்

Published On 2017-03-21 07:15 GMT   |   Update On 2017-03-21 07:15 GMT
சென்னை விமானநிலையத்தில் ஒரு செல்ஃபி எடுக்க கேட்ட ரசிகரிடம் தனது ஸ்டைலில் பதில் அளித்துள்ளார் நடிகர் கவுண்டமணி. அவர் என்ன சொன்னார் என்பதை கீழே பார்ப்போம்.
80-90 களில் தமிழ் சினிமாவில் காமெடியில் கொடிக்கட்டி பறந்தவர் கவுண்டமணி. இரண்டு தலைமுறை ரசிகர்களை சிரிப்பு  மழையில் நனைய வைத்திருக்கும் இவர், ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். முன்னணி  நடிகர்களுடன் நடிக்கும்போது அவர்களையே இவர் கலாய்த்து அனைவரையும் சிரிக்க வைத்திருப்பார்.

தனது அளப்பறியாத நகைச்சுவையின் மூலம் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த கவுண்டமணி, கவுண்டர்  வசனங்களுக்கு பெயர் பெற்றவர். கோயமுத்தூரில் பிறந்த இவருக்கு, கோயமுத்தூர் குசும்பு ரொம்பவே அதிகம். மேலும் இவரது  காமெடிகள் அனைத்து தலைமுறையினராலும் ரசித்து பார்க்கப்படும் ஒன்றாகவும் இருக்கிறது.



தனது வசனங்களால் மக்களை ரசிக்க வைத்த கவுண்டமணி, சிந்திக்கவும் வைத்திருக்கிறார். குறிப்பாக கவுண்டமணி - செந்தில்  இருவரும் இணைந்து நடித்த காமெடிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்றால் அது மிகையாகாது. மக்கள்  சந்திக்கவிருக்கும் பிரச்சனைகள் மற்றும் இன்னல்களை தனது வசனங்களால் முன்கூட்டியே ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த  பெருமை இவரையே சாரும். தொழில்நுட்ப வளர்ச்சியை பெரிதும் நாட்டமில்லாத நம்ம கவுண்டர் அதனை தவிர்த்தும் வருகிறார்.



அந்த வகையில், சென்னை விமான நிலையத்தில் ரசிகர் ஒருவர், கவுண்டமணியிடம் சென்று அவருடன் தனியாக ஒரு செல்ஃபி  எடுத்துக் கொள்ளலாமா? என்று கேட்டுள்ளார். அதற்கு கவுண்டமணி தனக்கே உரித்தான ஸ்டைலில் பதில் கூறியுள்ளார். அது  என்னவென்றால், அவருக்கு முன்னால் கையை நீட்டி, “அங்கே யாருமே இல்லை, போய் எடுத்துக்கோ” என்று கூறியுள்ளார்.  உடனே அந்த ரசிகரும் கவுண்டமணிக்கு எதிரே சற்று தூரம் சென்று கவுண்டர் பின்புறத்தில் உட்கார்ந்திருக்க, அவர் முன்பு நின்று  ஒரு செல்ஃபி எடுத்து அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த படம் சமூக வதைளங்களில் வைரலாக பரவி  வருகிறது.

எத்தனை வருடங்கள் ஆனாலும் அவரது நக்கல் பேச்சும், பஞ்ச்-சும் அவரை விட்டு போகாது என்பது இதன்மூலம்  ஊர்ஜிதமாகிறது.

Similar News