சினிமா

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரசிகையை நேரில் சந்தித்த மோகன்லால் ‘செல்பி’ எடுத்து மகிழ்ச்சி

Published On 2017-03-20 07:13 GMT   |   Update On 2017-03-20 07:13 GMT
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது ரசிகையை நேரில் சந்தித்த மோகன்லால் ‘செல்பி’ எடுத்து மகிழ்ச்சி தெரிவித்தார். இதுகுறித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.
திருவனந்தபுரம் அருகே ஸ்ரீகாரியம் கட்லேரி பகுதியை சேர்ந்தவர் சுபத்ரா (வயது 68). இவர் பிரபல மலையாள நடிகர்  மோகன்லாலின் தீவிர ரசிகை. மோகன்லால் நடித்த திரைப்படங்களை தியேட்டருக்கு சென்று பார்த்து ரசிப்பது இவரது வழக்கம்.

இந்த நிலையில் சுபத்ரா புற்றுநோயால் உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதனால் அவரால் தியேட்டருக்கு செல்லமுடியாத நிலை  ஏற்பட்டது. ஆனாலும் அவர் டி.வி.யில் ஒளிபரப்பாகும் மோகன்லால் படங்களை தவறாமல் பார்த்துவிடுவார்.

சுபத்ராவுக்கு நோய் தாக்குதல் அதிகமானதால் அடிக்கடி அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு  தன்னை கவர்ந்த நடிகரான மோகன்லாலை ஒருமுறையாவது நேரில் சந்தித்துவிட வேண்டும் என்ற ஆவல் அதிகமாக இருந்து  வந்தது.



இதைதொடர்ந்து சுபத்ரா மோகன்லாலை சந்திக்கும் தனது ஆசையை ‘வாட்ஸ்-அப்’ மூலம் அவருக்கு தெரிவித்தார். எனவே தனது  ரசிகையை நேரில் சந்தித்து அவரது விருப்பத்தை பூர்த்தி செய்ய மோகன்லால் விரும்பினார். அதனை முன்னிட்டு நேற்று அவரது  வீட்டிற்கு சென்று சுபத்ராவை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

மோகன்லாலை நேரில் பார்த்த இன்ப அதிர்ச்சியில் சுபத்ராவுக்கு பேச்சே வரவில்லை. அவருக்கு ஆறுதல் கூறிய மோகன்லால்  விரைவில் புற்றுநோயில் இருந்து குணமாக தான் கடவுளை பிரார்த்திப்பதாக கூறினார். மேலும் சுபத்ராவுடன் செல்பியும் எடுத்து  அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

மோகன்லால் வந்துள்ள தகவல் கிடைத்ததும் அவரை பார்க்க ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டனர். அவர்களை பார்த்து  கையசைத்தபடி மோகன்லால் அங்கிருந்து விடைபெற்றார்.

Similar News