சினிமா

`பாகுபலி-2' ரிலீசுக்கு முன்பாக பாகுபலியின் முதல் பாகம் மீண்டும் ரிலீஸ்

Published On 2017-03-17 00:27 GMT   |   Update On 2017-03-17 00:27 GMT
`பாகுபலி-2' படத்தின் ரிலீஸ் ஆவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக பாகுபலியின் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள `பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி  வெளியாகிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், `பாகுபலி-2' படத்தின் டிரைலரை படக்குழு  நேற்று ரிலீஸ் செய்தது.

குறிப்பாக `பாகுபலி' முதல் பாகத்தின் முடிவில் பாகுபலியை கட்டப்பா கொல்வது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். அதற்கான விடை  அதன் அடுத்த பாகத்தில் தான் இருப்பதால் `பாகுபலி-2' மீது ரசிகர்கள் அதீத எதிர்பார்ப்பில் உள்ளனர்.



அதிக பொருட்செலவில் உருவாகி இருக்கும் `பாகுபலி-2' படத்தில், அதன் முதல் பாகத்தில் நடித்திருந்த பிரபாஸ், ராணா, அனுஷ்கா,  தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
 
இந்நிலையில், `பாகுபலி-2' படம் வெளியாவதற்கு ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களுக்கு முன்பு பாகுபலியின் முதல் பாகத்தை  மீண்டும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக ராஜமவுலி தெரிவித்துள்ளார். அவ்வாறு ரிலீஸ் செய்வதன் மூலம் படத்தின்  தொடர்ச்சியை மக்கள் கண்டுகளிக்கலாம் என்று கூறினார். படத்தின் டிரெய்லர் வெளியானதையடுத்து, பிரபாஸ் மற்றும் ராணா படத்தை  திரையரங்குகளில் காண ஆர்வமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.



தொழில்நுட்ப குறைபாடு காரணமாக படத்தின் டிரெய்லர் முன்கூட்டியே வெளியானதாக கூறிய ராஜமவுலி, சொன்ன நேரத்திற்கு  முன்பே டிரெய்லர் ரிலீஸ் ஆனதால் ரசிகர்கள் மகிழ்ச்சியே அடைந்துள்ளதாக கூறினார்.

ராணா கூறும் போது, டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார்.



மேலும் பாகுபலியின் முதல்பாகம் இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.650 கோடி வரை வசூலித்ததாகவும் அவர் கூறினார். எனவே  பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாக உள்ள `பாகுபலி-2' படம் அதீத வசூலை குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Similar News