சினிமா

புதியமுகம் இயக்குனர் தீபன் திடீர் மரணம்

Published On 2017-03-13 07:51 GMT   |   Update On 2017-03-13 07:51 GMT
மலையாளத்தில் ‘புதியமுகம்’ படத்தை இயக்கிய தீபன் திடீர் மரணமடைந்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
மலையாளத்தில் 2003-ஆம் வெளிவந்த ‘லீடர்’ படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் இயக்குனர் தீபன். இப்படத்தை தொடர்ந்து 2009-ஆம் ஆண்டு மலையாளத்தில் ‘புதிய முகம்’ என்ற படத்தை இயக்கி பிரபலமானார். இப்படத்தில் பிரித்விராஜ், பிரியாமணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

அதைத் தொடர்ந்து ‘ஹீரோ’, ‘சிம்’ உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். இந்நிலையில், கடந்த 15 நாட்களாக உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த தீபன், இன்று காலமானார். கொச்சியில் உள்ள ஆஸ்பத்திரியில் அவரது உயிர் பிரிந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.



தீபன் சிறுநீரகம், கல்லீரல் பிரச்சினைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. காலமான தீபனுக்கு வயது 47. தீபனின் உடல் அவரது சொந்த ஊரான திருவனந்தபுரத்திற்கு கொண்டுசெல்லப்படுகிறது. அங்கு அவரது உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

தீபன் இயக்கத்தில் கடைசியாக உருவாகியுள்ள ‘சத்யா’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஜெயராம் கதாநாயகனாக நடித்துள்ளார் தீபனின் மறைவு மலையாள திரையுலகிற்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Similar News