சினிமா

திகில் கதைகளில் நடிக்க பிடிக்கும்: சமந்தா

Published On 2017-03-13 05:38 GMT   |   Update On 2017-03-13 05:38 GMT
திகில், நகைச்சுவை கதைகளில் நடிக்க பிடிக்கும்” என்று நடிகை சமந்தா கூறியுள்ளார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
நடிகை சமந்தா அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

கேள்வி:- நீங்கள் மணக்க இருக்கும் நாக சைதன்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பீர்களா?

பதில்:- நாக சைதன்யாவும், நானும் கடந்த வருடமே ஒரு படத்தில் சேர்ந்து நடிப்பதாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. தற்போது இன்னொரு படத்தில் நடிக்க தயாராகி இருக்கிறோம். இந்த படத்துக்கான கதை தயாராகி விட்டது. அடுத்த வருடம் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

கேள்வி:- உங்கள் மாமனார் நாகார்ஜுனிடம் பிடித்த விஷயம்?

பதில்:- அவர் சிறந்த மனிதர். நாக சைதன்யாவை மணந்த பிறகு நாகார்ஜுனை எப்படி அழைப்பீர்கள் என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள். அவரை எவ்வாறு கூப்பிடுவது என்பது குறித்து இன்னும் நான் முடிவு செய்யவில்லை.

கேள்வி:- வாய்ப்பு கிடைத்தால் எதிர்காலத்துக்கு போக ஆசைப்படுவீர்களா? கடந்த காலத்துக்கு போக விரும்புவீர்களா?

பதில்:- நான் இப்போது சந்தோஷமாகவே இருக்கிறேன். இதுவே எனக்கு போதும்.



கேள்வி:- நீங்கள் நடிக்க விரும்புவது நகைச்சுவை படங்களா? திகில் படங்களா?

பதில்:- வாய்ப்பு கிடைத்தால் நகைச்சுவை படங்களிலும், திகில் படங்களிலும் நடிக்க தயாராக இருக்கிறேன். குறிப்பிட்ட கதை மற்றும் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என்ற கட்டுப்பாடுகள் என்னிடம் இல்லை.

கேள்வி:- நாய்களிடம் பிடித்த விஷயம் என்ன?

பதில்:- நாய்கள் காரணம் இல்லாமல் எல்லோரையும் நேசிக்கும். இது அவைகளிடம் எனக்கு பிடித்த விஷயங்கள்.

கேள்வி:- இந்த பூமியில் உங்களுக்கு பிடித்தமான இடம் எது?

பதில்:- வேறு எது? எங்கள் வீடுதான். வீட்டில் இருப்பதுபோன்ற சந்தோஷம் வேறு எதிலும் இல்லை. படப்பிடிப்பு ஓய்வுகளில் வீட்டில் இருக்கவே விரும்புகிறேன்.

கேள்வி:- உங்களை பயமுறுத்துகிற விஷயம் எது?

பதில்:- தோல்விகள் என்றால் மிகவும் பயப்படுகிறேன். இதனால் வாழ்க்கையில் தோல்வி இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன். சில நேரங்களில் நான் வருத்தப்படக்கூடிய சம்பவங்கள் நடந்து விடுகின்றன. அப்போது ஐஸ்கிரீம் மற்றும் சாக்லெட்டுகளை கணக்கில்லாமல் சாப்பிடுவேன்.

கேள்வி:- உங்கள் அழகு ரகசியம் என்ன?

பதில்: நான் அழகு சாதன பொருட்களை பயன்படுத்துகிறேன். அதனால் அழகாக தெரிகிறேன்.

இவ்வாறு சமந்தா கூறினார்.

Similar News