சினிமா

எனக்கும் கவிதைக்கும் சம்பந்தமில்லை: கவிஞர் வைரமுத்து பகீர் தகவல்

Published On 2017-02-27 08:47 GMT   |   Update On 2017-02-27 08:47 GMT
கவிஞர் வைரமுத்து சமூக வலைத்தளத்தில் தனது பெயரில் வெளிவந்த கவிதைக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
கவிஞர் வைரமுத்து, எந்தவொரு விஷயம் என்றாலும் நேரிடையாக பத்திரிகையாளர்களை அழைத்து நேருக்கு நேர் தைரியமாக சொல்லக்கூடிய கலைஞர். ஆனால், அவருடைய பெயரில் ஒரு புதுக்கவிதை ஒன்று இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. ‘இது யாரோட இந்தியா’ என்ற பெயரில் வரும் அந்த கவிதையில், பாவானா, அம்பானி தொடங்கி, அரசியல்வாதிகள், கல்வி, இயற்கை அழிப்பு உள்ளிட்ட அம்சங்கள் அடங்கியுள்ளன.

வைரமுத்துவின் அணுகுண்டு கவிதை என்ற பெயரில் உலாவிய இந்த கவிதை தன்னுடையது அல்ல என்று வைரமுத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘இது யாரோட இந்தியா’ என்ற தலைப்பில் என் பெயரிட்டு சில வரிகள் சமூக ஊடகங்களில் உலா வருவதாக என் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை என்மீது அன்பு கொண்ட அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.



ஏற்கெனவே, கமல் பெயரில் ஒரு வாட்சப் கவிதை வெளியாகி இணையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. வைரமுத்து பெயரில் வெளிவந்த கவிதை கீழே....

பாவனா-வுக்கு
பாவாடை கிழிந்தால்
பாராளுமன்றம் வரை எதிரொலிக்கிறது

நந்தினி
ஹாசினி-களுக்கு
கருவறுக்கப்பட்டாலும்
அது கிணற்றுக்குள்ளே மூடி மறைக்கப்படுகிறது …!!!

அம்பானி, அதானி
மல்லையா கடன் வாங்கினால்
அது தள்ளுபடி செய்யப்படுகிறது

இராமையா
மூக்கையா இராமசாமி-கள்
கடன் வாங்கினால்
தடியடி நடத்தி வசூலிக்கப்படுகிறது..!!!

அரசியல்வாதிகள்
ஆற்றுமணலை கொள்ளையடித்தால்
சுங்கச்சாவடிகள் சுதந்திரமாக திறக்கப்படுகிறது

அன்றாட காய்சிகள்
மாட்டு வண்டியில்
மணல் எடுத்தால்
மாட்டு வண்டிகள் சூறையாடப்படுகிறது..!

கல்வியை தொழிலாக்கி
அதை காசுக்கு விற்று
பணம் பார்க்கும் கபோதிகளுக்கு
கல்வி தந்தையென பட்டம் அளிக்கப்படுகிறது

தேர்விலே
பக்கத்தில் இருப்பவனை பார்த்து
காப்பி அடித்தால் மாணவனுக்கு
மூன்றாண்டு தேர்வெழுத தடைவிதிக்கிறது..!

போலி நாயகனுக்கும்
அரசியல் வாதிகளுக்கும்
சட்டத்தில் பல விதிவிலக்குகள் அளிக்கப்படுகிறது

சாமானியனுக்கோ சட்டம்
தன் கடமையை செய்கிறது..!

இயற்கையை அழிப்பவன்
இறைவனென போற்றப்படுகிறான்

இயற்கையை காக்க போராடுபவன்
தேசதுரோகியென தூற்றப்படுகிறான்.

ஆக இது யாரோட இந்தியா..
இதுதான் இந்தியாவெனில் யாருக்கு வேணும் இந்த இந்தியா..?

Similar News