சினிமா

புதிய கட்சி தொடங்கிய இளைஞர்களுக்கு நடிகர் விவேக் அறிவுரை

Published On 2017-02-27 05:31 GMT   |   Update On 2017-02-27 05:31 GMT
புதிய கட்சி தொடங்கிய இளைஞர்கள் நல்லகண்ணு, சகாயம் போன்றவர்களிடம் ஆலோசனை பெறுவது நலம் என்று நடிகர் விவேக் அவர்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார். இது குறித்த செய்தியை பார்க்கலாம்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இணைந்த இளைஞர்கள் நேற்று முன்தினம் திடீரென்று புதிய கட்சி ஒன்றை தொடங்கினார்கள். அந்த கட்சிக்கு ‘என் தேசம் என் உரிமை’ என்ற பெயரை சூட்டியுள்ளனர். அவர்கள் தொடங்கிய கட்சிக்கு இளைஞர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் கட்சியின் உறுப்பினரை சேர்க்கும் பணியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் கட்சி தொடங்கிய முதல் நாளிலேயே அவர்கள் கட்சியின் பிரத்தியேக இணையதளம் மூலம் 6 லட்சம் பேர் இணைந்திருப்பதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.



இந்த நிலையில் புதிதாக கட்சி தொடங்கி இருக்கும் ஜல்லிக்கட்டு போராட்ட இளைஞர்களுக்கு நடிகர் விவேக் ஒரு அறிவுரை வழங்கி இருக்கிறார். அவருடைய ‘டுவிட்டர்’ கணக்கு பக்கத்தில் கட்சி தொடங்கி இருக்கும் இளைஞர்களுக்காக பதிவு செய்து இருக்கும் கருத்துகள் வருமாறு:-

‘இளைஞர்கள் இணையும் அமைப்பு வரவேற்கத்தக்க பிரமிப்பு, ஆயினும் பெருங்கட்சிகளுக்கு இணையான கட்டுமானம் இல்லாததால் நல்ல கண்ணு, சகாயம் போன்ற சமூகத் தூயவர்களிடம் ஆசியும், ஆலோசனையும் பெறுவது நலம்’.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News