சினிமா

பாவனா வழக்கில் கைதான டிரைவர் பல நடிகைகளை மிரட்டி ஆபாச படம் எடுத்தாரா?: தீவிர விசாரணை

Published On 2017-02-25 05:50 GMT   |   Update On 2017-02-25 05:50 GMT
பாவனா வழக்கில் கைதான டிரைவர், பல நடிகைகளை மிரட்டி ஆபாச படம் எடுத்தாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.
பிரபல நடிகை பாவனா கடந்த 17-ந்தேதி திருச்சூரில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு கொச்சிக்கு காரில் திரும்பிக்  கொண்டிருந்தார்.

அப்போது ஒரு கும்பல் காருடன் அவரை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தனர். அதை செல்போனிலும் படம் பிடித்தனர். இது  தொடர்பாக பாவனா போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டின் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் இக்கடத்தலுக்கு  மூளையாக செயல்பட்டது பாவனாவின் முன்னாள் கார் டிரைவர் சுனில்குமார் என்ற பல்சர் சுனில் மற்றும் அவரது கூட்டாளி  விஜேஷ் என்பது தெரியவந்தது.



இருவரையும் போலீசார் தேடிவந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்கள் எர்ணாகுளம் கோர்ட்டில் சரண் அடைய சென்றனர்.  அப்போது கோர்ட்டுக்கு மதிய உணவு இடைவேளை விடப்பட்டதால், சுனில்குமாரையும் அவரது நண்பர் விஜேசையும் போலீசார்  கோர்ட்டு வளாகத்தில் வைத்து அதிரடியாக பிடித்தனர்.

பின்னர் அவர்களை ஆலுவா போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அப்போது சுனில் போலீசாரிடம் கூறியதாவது:-

இந்த சம்பவத்தில் முக்கிய பிரமுகர்கள் யாருக்கும் தொடர்பு இல்லை. பணம் பறிக்கவே பாவனாவை கடத்தினோம். அவர்,  போலீசில் புகார் செய்யமாட்டார் என்று நினைத்தோம்.



ஆனால் நாங்கள் நினைத்ததற்கு மாறாக அவர், போலீசில் புகார் செய்துவிட்டார். எனவேதான் நாங்கள் தலைமறைவானோம்.  காருக்குள் பாவனாவை மிரட்டி சித்ரவதை செய்த காட்சிகளை செல்போனில் படம் பிடித்தோம். போலீசார் தேடுவதை அறிந்ததும்  அந்த செல்போனை கழிவுநீர் ஓடையில் வீசி விட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கைதான சுனில்குமார், விஜேஷ் இருவரும் போலீசாரிடம் தெரிவித்த தகவல்கள் அனைத்தும் உண்மை என்று போலீசார்  நம்பவில்லை. எனவே அவர்கள் சுனில்குமார், விஜேஷ் இருவரையும் தனித்தனி அறைகளில் வைத்து விசாரித்தனர்.



இதுபோல இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட பாவனாவின் டிரைவர் மார்ட்டின் கூலிப்படையைச் சேர்ந்த  மணிகண்டன் ஆகியோரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணையில், சுனில்குமார் பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு தெரியவந்தது. சுனில்குமார் மலையாள  திரையுலக பிரபலங்களுடன் நெருக்கமாக இருந்தவர். இதனால் நடிகைகள் பற்றியும், அவர்களிடம் புழங்கும் பணம் குறித்தும்  அவருக்கு அனைத்து தகவல்களும் தெரியும்.

அதன் அடிப்படையில் நடிகைகள் தனியாக இருப்பதை அறிந்து அவர்களை கடத்தி, பணம் பறித்துள்ளார்.

பணம் கொடுக்க மறுப்பவர்களை ஆபாச படம் எடுத்தும் மிரட்டி உள்ளார். குடும்ப மானம், சமூகத்தில் அவப்பெயர் ஏற்படும்  என்பதற்காக இந்த சம்பவங்களை பலரும் வெளியில் சொல்லாமல் மனதிற்குள்ளேயே பூட்டி வைத்துள்ளனர். பணம் கொடுத்த  பலரும் போலீசாரிடம் இதுவரை புகார் செய்யவில்லை.

சுனில்குமாரின் கூட்டாளிகளை தனியாக விசாரித்தபோது இந்த தகவல்களை போலீசார் தெரிந்து கொண்டனர்.



சுனில்குமார் எந்தெந்த நடிகைகளை மிரட்டினார்? யார்-யாரை ஆபாச படம் எடுத்தார்? என்ற தகவல்கள் அனைத்தும் அவரது  செல்போனில் உள்ளது. அந்த செல்போனைத்தான் கழிவு நீர் ஓடையில் வீசி விட்டதாக சுனில்குமார் கூறி உள்ளார். அவர்  தெரிவித்தது உண்மைதானா? என்பதை அறிந்து கொள்ள நேற்று போலீசார் அவரை அழைத்துச் சென்று திருச்சூர் முதல் கொச்சி  வரையிலான சாலையில் உள்ள கழிவுநீர் ஓடைகளை சோதனை செய்தனர். அதில், செல்போன் கிடைக்கவில்லை.

எனவே சுனில்குமார் போலீசாரை ஏமாற்ற பொய் சொல்கிறார் என்று முடிவு செய்தனர்.

சுனில்குமாருக்கு ஒரு காதலி இருக்கிறார். அவரது தோழி ஒருவர் பெண் தொழில்அதிபராக உள்ளார். அவருக்கும், நடிகைகளை  கடத்தி பணம் பறிக்கும் சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

அந்த தொழில் அதிபரை கண்டுபிடித்து விசாரணை நடத்தவும் போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.



இதற்கிடையே நேற்று முன்தினம் கைது செய்யப் பட்ட சுனில்குமார், விஜேஷ் இருவரையும் போலீசார் ஆலுவா மாஜிஸ்திரேட்டு  கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து சுனில்குமார், விஜேஷ் இருவரும் காக்க நாடு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். சுனில்குமார், விஜேஷ் இருவரையும்  போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் போலீசாரின் பல்வேறு சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் என்று போலீஸ் உயர்  அதிகாரிகள் கருதுகிறார்கள். எனவே அவர்கள் இருவரையும் 10 நாள் போலீஸ் காவலில் எடுக்க அனுமதி கேட்டு இன்று ஆலுவா  கோர்ட்டில் போலீசார் மனுத்தாக்கல் செய்கிறார்கள்.

Similar News