சினிமா

மகன் என உரிமை கோரி தொடர்ந்த வழக்கு: தனுஷ் நேரில் ஆஜராக மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு

Published On 2017-02-24 07:20 GMT   |   Update On 2017-02-24 07:20 GMT
மகன் என உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக நடிகர் தனுஷ் வருகிற 28-ந்தேதி ஆஜராக வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை மேலூரைச் சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதியினர், நடிகர் தனுஷ் எங்களுடைய மகன், எங்களுக்கு வயதாகி விட்டதால் பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கு பொய்யானது. அதனை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளையில் நடிகர் தனுஷ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே இரு தரப்பினரிடமும் உள்ள நடிகர் தனுசின் பள்ளி மாற்று சான்றிதழ்களை தாக்கல் செய்யுமாறு மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டு இருந்தது. அதன்படி இருதரப்பினரும் சான்றிதழ்களை தாக்கல் செய்தனர்.


நடிகர் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சான்றிதழ்களில் அங்க மச்சம் அடையாளம் குறிப்பிடவில்லை என எதிர்தரப்பினர் வாதிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று, நீதிபதி சொக்கலிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நடிகர் தனுசின் அங்கமச்ச அடையாளம் காண அவர் வருகிற 28-ந்தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை அன்றைக்கு ஒத்தி வைத்தார்.

Similar News