சினிமா

பாவனா விவகாரம்: அதிர்ச்சியில் நயன்தாரா, திரிஷா, காஜல் உள்ளிட்ட முக்கிய நடிகைகள்

Published On 2017-02-22 05:45 GMT   |   Update On 2017-02-22 06:30 GMT
பாவனாவுக்கு நடந்த பாலியல் தொல்லையால் நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, அனுஷ்கா, காஜல் அகர்வால் உள்ளிட்ட கதாநாயகிகள் காரில் தனியாக பயணம் செய்ய பயப்படுகின்றனர். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
தமிழ், மலையாளம், கன்னட பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் பாவனாவை டிரைவர்கள் உள்ளிட்ட சிலர் காரில் கடத்தி இரண்டு மணி நேரம் காருக்குள்ளேயே வைத்து பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கி வீடியோ படம் எடுத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர்-நடிகைகள் வற்புறுத்தி வருகிறார்கள்.

இந்த கடத்தலில் பாவனாவின் தற்போதைய டிரைவர் மார்ட்டின், முன்னாள் டிரைவர் சுனில்குமார் என்ற பல்சர் சுனில் உள்ளிட்ட 6 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மார்ட்டினை உடனடியாக போலீசார் கைது செய்தனர். கண்ணூரை சேர்ந்த பிரதீப், சலீம் ஆகிய மேலும் இரண்டு பேர் கோவையில் பதுங்கி இருந்தபோது பிடிபட்டனர். முக்கிய குற்றவாளியான சுனில்குமார் நண்பர் ஒருவர் வீட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் வர அந்த இடத்தை போலீசார் முற்றுகையிட்டனர். ஆனால் அங்கிருந்து அவர் தப்பி விட்டார்.



சுனில்குமார் சினிமாவில் கட்டப்பஞ்சாயத்து செய்து ரவுடியாக வலம் வந்த பழைய குற்றவாளி என்பது விசாரணையில் தெரியவந்து இருக்கிறது. இவர் மீது அடிதடி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் போலீஸ் நிலையத்தில் பதிவாகி உள்ளன. சில நடிகர்களுக்கு போதை பொருட்களையும் சப்ளை செய்து வந்துள்ளார். ஏற்கனவே முன்னாள் கதாநாயகியும் கீர்த்தி சுரேசின் தாயாருமான மேனகா உள்பட 3 நடிகைகளை அவர் கடத்த முயன்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கிறது.

கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது சுனில்குமார் தங்களிடம் பாவனாவை கடத்தினால் தனக்கு ரூ.50 லட்சம் கிடைக்கும் என்றும் அதில் ரூ.30 லட்சத்தை உங்களுக்கு பிரித்து தருகிறேன் என்றும் கூறினார். ஆனால் அவர் சொன்னபடி எங்களுக்கு பணம் தரவில்லை என்று தெரிவித்து உள்ளனர். பாவனாவை கடத்தியபோது சுனில்குமார் போனுக்கு பிரபல நடிகர் ஒருவரும், அரசியல்வாதியின் மகன்கள் இரண்டு பேரும் அடிக்கடி பேசி உள்ளனர்.

இதனால் அவர்களுக்கு இந்த கடத்தலில் தொடர்பு இருக்குமோ என்று போலீசாரின் சந்தேகப்பார்வை திரும்பி இருக்கிறது. அவர்களிடம் ரகசிய விசாரணை நடந்து வருகிறது. பாவனாவை மிரட்டும் நோக்கத்திலேயே இந்த கடத்தல் நடந்ததாகவும், ஆனால் எதிர்பாராமல் அது பாலியல் துன்புறுத்தலாக மாறிவிட்டது என்றும் கூறப்படுகிறது.



பாவனாவுக்கு நேர்ந்த இந்த கொடுமையால் நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, அனுஷ்கா, காஜல் அகர்வால் உள்ளிட்ட முன்னணி கதாநாயகிகள் பலர் அதிர்ச்சியில் உள்ளனர். நயன்தாரா டோரா, இமைக்கா நொடிகள், அறம், கொலையுதிர் காலம், வேலைக்காரன் ஆகிய படங்களிலும், திரிஷா மோகினி, சதுரங்க வேட்டை-2, கர்ஜனை, 1818 ஆகிய படங்களிலும், அனுஷ்கா பாகுபலி இரண்டாம் பாகம், பாக்மதி படங்களிலும், காஜல் அகர்வால் விவேகம் மற்றும் நீனே ராஜா, நானே மந்திரி என்ற தெலுங்கு படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஹன்சிகாவும் தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.

இவர்கள், படப்பிடிப்புகளை முடித்து விட்டு விமான நிலையங்களுக்கும், ஓட்டல்களுக்கும் டிரைவர்களுடன் தனியாக காரில் பயணப்பட அச்சப்படுகின்றனர். இதனால் இந்த நடிகைகளுக்கு பாதுகாப்பாக தெரிந்த நபர்களை அதே கார்களில் தயாரிப்பாளர்கள் அனுப்பிவைக்கிறார்கள். வாடகை கார்களில் நடிகைகளை அனுப்புவதை தவிர்த்து படகம்பெனி கார்களிலேயே அவர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

Similar News