சினிமா

வெற்றிப்பட இயக்குநருடன் மீண்டும் இணையும் தனுஷ்

Published On 2017-02-22 02:06 GMT   |   Update On 2017-02-22 02:06 GMT
வெற்றிப்பட இயக்குநருடன் நடிகர் தனுஷ் இணைந்து மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அந்த இயக்குநர் யார்? என்ன படம் என்பதை கீழே பார்ப்போம்.
கடந்த ஆண்டு தீபாவளி ரிலீசாக வெளியான `கொடி' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் தனுஷ்  முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடித்து கலக்கியிருந்தார். அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் அரசியல்வாதியாகவும்  தனுஷ் மிரட்டியிருந்தார். இந்நிலையில், `கொடி' படத்தை இயக்கிய துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் மீண்டும் நடிக்க  உள்ளதாக அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.



இந்த ஆண்டு தனுஷுக்கு வரிசையாக படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கிறது. `எனை நோக்கி பாயும் தோட்டா', `வடசென்னை',  `வேலையில்லா பட்டதாரி 2', `மாரி 2' உள்ளிட்ட படங்களும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படமும், ஒரு ஹாலிவுட்  படமும் இந்த ஆண்டில் ரிலீசாக உள்ளன.

மேலும் தனுஷ் இயக்கி வரும் `பவர்பாண்டி' படம் ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டுக்கு ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.  இந்நிலையில், துரைசெந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள பெயரிடப்படாத படமும் இந்த ஆண்டே வெளியாகும்  என்று கூறப்படுகிறது.



தனுஷ் - துரைசெந்தில்குமார் இடையே நல்ல நட்பு இருப்பது அனைவரும் அறிந்ததே. முன்னதாக துரைசெந்தில்குமார்  இயக்கத்தில் வெளியான `எதிர்நீச்சல்', `காக்கி சட்டை' ஆகிய இருபடங்களையும் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் தலைப்பில்  தயாரித்திருந்தார். அதன்பின்னர் `கொடி' படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், தனுஷின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. எனவே இந்த ஆண்டில் தனுஷ் தனது  ரசிகர்களுக்கு தொடர் விருந்து அளிப்பார் என்பதில் சந்தேகமில்லை.

Similar News