சினிமா

மனஉளைச்சலை கவர்னருக்கு மின்அஞ்சலாக அனுப்புங்க: நடிகர் கமலஹாசன் டுவீட்

Published On 2017-02-18 12:57 GMT   |   Update On 2017-02-18 12:57 GMT
மனஉளைச்சலை கவர்னருக்கு மின்அஞ்சலாக அனுப்ப நடிகர் கமலஹாசன் தனது டுவீட்டில் தெரிவித்துள்ளார். அவரது பகர்தலை கருத்தை விரிவாக கீழே பார்ப்போம்.
தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப நடிகர் நடிகைகள் என பலர் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டு  வருகின்றனர். இதில் தனது நேரடியான, வெளிப்படையான கருத்துக்களின் மூலம் ரசிகர்களை ஈர்த்து வருபவர்களில் நடிகர்  கமலஹாசனும் ஒருவர்.

அவ்வப்போது நிகழும் முக்கிய நிகழ்வுகள், பிரச்சனைகள் குறித்து தனது கருத்துக்களை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து வரும் கமல்,  தற்போது தமிழகத்தின் அரசியல் மாற்றங்கள் குறித்த தனது கருத்துக்களை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னர் கமல் தனது டுவிட்டரில் பக்கத்தில் தெரிவித்ததாவது,
"இன்று காண்போம் நரி பரியாகும் விந்தை. வெல்வது நல்ல மக்களின் மந்திரமா? அந்த சொக்கனின் தந்திரமா? பார்ப்போம்".

என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கடும் அமளிக்கிடையே நடந்த வாக்கெடுப்பிற்கு பின்னர் எடப்பாடி பழனிச்சாமி 122 ஓட்டுகளை பெற்று முதல்வராக  பொறுப்பேற்க சபாநாயகர் அனுமதி அளித்தார்.

அதனைத்தொடர்ந்து, அடுத்த சில நிமிடங்களிலேயே கமல் மீண்டும் தனது கருத்தை டுவிட்டரில் பகிர்ந்தார். அதில் "Rajbhavantamilnadu@gmail.com ங்கற விலாசத்துக்கு நம் மன உளைச்சலை மின் அஞ்சலா அனுப்புங்க. மரியாதையா பேசணும்  அது அசம்பளியில்ல Governor வீடு"

என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

Similar News