சினிமா

ரஜினி - பா.ரஞ்சித் இணையும் அடுத்த படத்தின் புதிய அப்டேட்

Published On 2017-02-16 06:34 GMT   |   Update On 2017-02-16 06:34 GMT
கபாலி படத்திற்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி மீண்டும் நடிக்க உள்ள அடுத்த படம் குறித்த புதிய தகவலை கீழே பார்க்கலாம்.
ரஜினி-பா.ரஞ்சித் கூட்டணியில் கடந்த ஆண்டு ஜுலை மாதம் வெளியான ‘கபாலி’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

‘கபாலி’ படத்திற்கு பிறகு ரஜினி  தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘2.ஓ’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே ரஜினியின் அடுத்த படத்திற்கான அறிவிப்பும் முன்னதாக வெளியிடப்பட்டது.

`2.ஓ' படத்திற்கு பிறகு ரஜினி எந்த படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பா.ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளதாகவும் அப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில்  முன்னதாக அறிவித்திருந்தார்.

‘கபாலி’ படம் பல்வேறு சாதனைகளை முறியடித்து வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் ரஜினி-பா.ரஞ்சித் கூட்டணியில் புதிய  படம் உருவாவதாக வந்த அறிவிப்பால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சென்னையில் நடைபெற்று வரும் `2.ஓ' படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் முடிவடைகிறது. அதனைதொடர்ந்து, ரஜினி-பா.ரஞ்சித் இணையும் படத்தின் படப்பிடிப்பு மே மாதத்தில் தொடங்க  உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Similar News