சினிமா

எம்.ராஜேஷ் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் சந்தானம்

Published On 2017-02-02 09:04 GMT   |   Update On 2017-02-02 09:04 GMT
ஹீரோ அவதாரம் எடுத்துவிட்ட சந்தானம் தற்போது மீண்டும் ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
எம்.ராஜேஷ் தன்னுடைய இயக்கத்தில் முதன்முதலாக வெளிவந்த ‘சிவா மனசுல சக்தி’ படத்தில் இருந்து, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படம் வரைக்கும் சந்தானம் இல்லாமல் படமே எடுத்தது கிடையாது. அந்தளவுக்கு ராஜேஷின் படங்களில் சந்தானத்தின் காமெடி முக்கிய இடம்பெறும்.

ஆனால், ஒருகட்டத்தில் சந்தானம் ஹீரோவான பிறகு காமெடி வேடத்தில் நடிக்கப்போவதில்லை என்று அறிவித்தார். அதன்பிறகு, ராஜேஷ் இயக்கத்தில் வெளிவந்த ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் சந்தானம் இல்லாமேலேயே உருவாகி வெளிவந்தது. படமும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை.

இந்நிலையில், ஹீரோவான சந்தானத்தை தன்னுடைய படத்திலும் ஹீரோவாகவே கொண்டு வந்து இழந்த மார்க்கெட்டை மீட்டெடுக்க ராஜேஷ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் சந்தானத்தை சந்தித்து ராஜேஷ் அவருக்காக உருவாக்கப்பட்ட கதையை சொன்னாராம். கதை பிடித்துப்போய் இதில் நடிக்க சந்தானமும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இவர்கள் இணையும் படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சந்தானம் நடிப்பில் தற்போது ‘சர்வர் சுந்தரம்’, ‘மன்னவன் வந்தானடி’, ‘சக்க போடு போடு ராஜா’ ‘ஓடி ஓடி உழைக்கணும்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இப்படங்கள் முடிந்தபிறகு ராஜேஷ் இயக்கத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

Similar News