சினிமா

சிரஞ்சீவி என் மனதில் இடம் பிடித்து விட்டார்: காஜல் அகர்வால்

Published On 2017-01-26 04:25 GMT   |   Update On 2017-01-26 04:25 GMT
பெரிய நடிகராக இருந்தும் பந்தா இல்லாதவர் சிரஞ்சீவி. அவர் என் மனதில் இடம் பிடித்து விட்டார் என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார். இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
நடிகை காஜல் அகர்வால் ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:-

“என் சினிமா வாழ்க்கை நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது. நடிக்க வந்து 10 வருடங்கள் ஆன பிறகும் படங்கள் குறையவில்லை. படப்பிடிப்புகளுக்காக ஓய்வில்லாமல் சுற்றிக்கொண்டு இருக்கிறேன். என்னை சந்திப்பவர்கள் உங்களுக்கு திருமணம் எப்போது என்று கேட்கிறார்கள்.

யாரையாவது காதலிக்கிறீர்களா? என்று கேட்டால் பரவாயில்லை. ஆனால் திருமணம் பற்றியே பேசுகிறார்கள். எனக்கு திருமணம் குறித்து சிந்திக்கவே நேரம் இல்லை. இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. திருமணத்துக்கும் தயாராகவில்லை. அதற்கு நேரம் அமையவேண்டும். பெற்றோர்கள் பார்க்கும் மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்து கொள்வது என்ற முடிவில் இருக்கிறேன்.

ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது பற்றியும் கேள்வி எழுப்புகிறார்கள். அப்படி ஆடுவதில் தவறு இல்லை. எனக்கு நடனம் ஆடுவது மிகவும் பிடிக்கும். பெரிய கதாநாயகர்கள் படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட அழைத்தால் மறுக்க மாட்டேன். தற்போது தெலுங்கில் ராணாவுடனும் தமிழில் விஜய், அஜித்குமார் ஆகியோருடனும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன்.

இதுவரை நான் நடித்த படங்கள் அனைத்துமே நல்ல கதைகளாகவும் கதாபாத்திரங்களாகவும் அமைந்தன. இனிமேலும் எனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடிப்பேன்.

சிரஞ்சீவி படத்தில் நடித்தது மறக்கமுடியாத அனுபவம். அவருடைய குடும்பத்தை சேர்ந்த ராம் சரண், பவன்கல்யாண், அல்லுஅர்ஜூன் ஆகியோருடன் ஏற்கனவே நடித்து இருக்கிறேன்.

சிரஞ்சீவி நன்றாக நடனம் ஆடக்கூடியவர். அவருடன் இணைந்து ஆடுவது பெரிய சவாலாக இருந்தது. எனக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்டால் சிரஞ்சீவி என்பேன். அந்த அளவுக்கு எனது மனதில் பதிந்து விட்டார். பெரிய நடிகராக இருந்தும் பந்தா இல்லாமல் எல்லோருடனும் சகஜமாக பழகக்கூடியவர்.”

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

Similar News