சினிமா

மின்சாரம் திருடியதாக நடிகை ரதி மீது வழக்கு

Published On 2017-01-21 03:52 GMT   |   Update On 2017-01-21 03:52 GMT
ரூ.49 லட்சம் மின் திருட்டில் ஈடுபட்டதாக நடிகை ரதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
புதிய வார்ப்புகள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரதி. இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றவர். மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் அனில் விர்வானியை திருமணம் செய்து ஒர்லி பகுதியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் மின்வினியோகம் செய்யும் நிறுவனமான ‘பெஸ்ட்’ கழக அதிகாரிகள் நடிகை ரதியின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் அவரது வீட்டில் உள்ள மின் மீட்டரை ஓடவிடாமல் செய்து நூதன முறையில் மின்திருட்டில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளில் ரதியின் வீட்டில் ரூ.48 லட்சத்து 97 ஆயிரத்திற்கு மின் திருட்டு நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

பெஸ்ட் கழகத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த அதிரடி சோதனை குறித்து பெஸ்ட் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சந்தேகம் ஏற்பட்டால் யார் வீட்டில் வேண்டுமானாலும் சோதனை நடத்த எங்களுக்கு கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது. நடிகை ரதியின் வீட்டில் உள்ள மின் மீட்டரில் ஏதோ பிரச்சினை இருப்பதாக உணர்ந்தோம். எனவே அங்கு போலீசார் உதவியுடன் சென்று சோதனை நடத்தினோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News