சினிமா

மெரினாவில் மகனை காணாமல் தேடி அலைந்த இயக்குனர் தங்கர்பச்சான்

Published On 2017-01-21 03:27 GMT   |   Update On 2017-01-21 03:27 GMT
சென்னை மெரினா கடற்கரையில் போராட்டக்குழுவினரை சந்தித்து ஆதரவு தெரிவிப்பதற்காக சென்ற இயக்குனர் தங்கர்பச்சான் தனது மகனை காணாமல் சிறிது நேரம் பரிதவித்தார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
இயக்குனர் தங்கர்பச்சான் போராட்டக்குழுவினரை சந்தித்து ஆதரவு தெரிவிப்பதற்காக நேற்று மெரினா கடற்கரைக்கு காரில் வந்தார். காரை அவருடைய மகன் விஜித்பச்சான் (வயது 24) ஓட்டி வந்தார். விவேகானந்தர் இல்லம் முன்பு காரில் இருந்து தங்கர்பச்சான் இறங்கிவிட்டார். அவருடைய மகன் விஜித்பச்சான் காரை பார்க்கிங் செய்துவிட்டு வருவதாக கூறி சென்றார்.

இந்தநிலையில் இளைஞர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு தங்கர்பச்சான் வெளியே வந்து, மகனுக்காக காத்திருந்தார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வரவில்லை. இதையடுத்து அவர் எங்கே இருக்கிறார்? என்பதை அறிவதற்காக செல்போனில் தொடர்புகொண்டார். ஆனால் பலமுறை தொடர்புகொண்டும் விஜித்பச்சானின் செல்போன் இணைப்பு கிடைக்கவில்லை.

அங்கு ‘மைக்’ மூலம் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர்களிடம், ‘தன்னுடைய மகன் விஜித்பச்சானை காணவில்லை என்ற விவரத்தை கூறினார். இதையடுத்து தங்கர்பச்சான் மகன் விஜித்பச்சான் எங்கிருந்தாலும் விவேகானந்தர் இல்லம் முன்பு வரும்படி மைக் மூலம் தொடர்ந்து அழைப்பு விடுக்கப்பட்டது.

தங்கர்பச்சானும் செல்போன் மூலம் அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்துகொண்டே இருந்தார். அதற்கு பலனாக விஜித்பச்சானின் செல்போன் இணைப்பு கிடைத்தது. அப்போது தான் இருக்கும் இடத்தை அவர் கூறினார். இதையடுத்து தங்கர்பச்சான் தனது மகனை பார்க்க சென்றார்.

Similar News