சினிமா

ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி பிரதமர் மோடிக்கு விஷால் கடிதம்

Published On 2017-01-18 07:40 GMT   |   Update On 2017-01-18 07:40 GMT
ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி பிரதமர் மோடிக்கு நடிகர் விஷால் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
ஜல்லிக்கட்டை தமிழகத்தில் நடத்தக்கோரி இளைஞர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில், நடிகர் விஷால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஷால் இன்று பத்திரிகையாளர் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசும்போது, நான் என்றுமே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாளன்தான். ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய பீட்டா அமைப்பில் நான் உறுப்பினரே கிடையாது. யாரோ ஒருவர் அப்படியொரு தவறான தகவலை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு எனது பெயரை களங்கப்படுத்திவிட்டார்.

ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் நடத்தக்கூடிய இந்த போராட்டம் மிகப்பெரியது. ஜல்லிக்கட்டு வேண்டும் என்ற அவர்களது போராட்டம் கண்டிப்பாக வெற்றியடையும். ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு மத்திய அரசு முன்வரவேண்டும். இதற்காக நான் தனிப்பட்ட முறையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளேன். அவரை சந்திக்கவும் அனுமதி கேட்டுள்ளேன். விரைவில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடந்த தீரும். விரைவில், நடிகர் சங்கம் மூலமாகவும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்து, நடிகர் சங்கத்தில் விவாதித்து அதன்பிறகு போராட்டத்தில் களமிறங்குவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News