சினிமா

நிவின் பாலி - விக்ரம் கூட்டணி குறித்து மனம் திறந்த கவுதம் மேனன்!

Published On 2017-01-10 07:35 GMT   |   Update On 2017-01-10 07:35 GMT
கவுதம் - நிவின் பாலி - விக்ரம் கூட்டணி என கடந்த வாரத்தில் பரவிய தகவல் குறித்து கவுதம் மேனன் பதிலளித்துள்ளார். இதுகுறித்த தகவலை காணலாம்.
'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிசியாக உள்ள கவுதம் மேனன், விக்ரமுடன் இணைந்து 'துருவ நட்சத்திரம்' படத்தை இயக்கி வருகிறார். கவுதம் மேனனின் கனவு படமான இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் தொடங்கியுள்ள நிலையில், அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. மேலும் தினமும் ‘துருவ நட்சத்திரம்’ குறித்த ருசீகர தகவல் டுவிட்டரில் வெளியிடப்படும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக கடந்த வாரத்தில், கவுதம் மேனன் - 'பிரேமம்' புகழ் நிவின் பாலியும் புதிய படத்தில் இணைய உள்ளதாக தகவல் பரவி வந்தது. இதற்காக கவுதம், நிவினிடம் கதை கூறியதாகவும், இதில் நிவின் பாலி இருவேடத்தில்  நடிக்கவிருப்பதாகவும், நிவினுக்கு வில்லனாக விக்ரமை நடிக்க வைக்க கவுதம் முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் பரவி வந்தன.

இந்த தகவலுக்கு கவுதம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, விக்ரம்-நிவின்பாலியை வைத்து நான் புதிய படம் ஒன்றை இயக்கப்போவதாக வெளிவந்த செய்திகள் அனைத்தும் வதந்தியே. நான் தற்போது ‘துருவ நட்சத்திரம்’ பட வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 4 மொழிகளில் தனித்தனியாக படங்களை எடுக்க முடிவு செய்துள்ளேன். மலையாளத்தில் பிரித்விராஜ், கன்னடத்தில் புனித் ராஜ்குமார் ஆகியோரை வைத்து இயக்கவுள்ளதாகவும், தமிழில் ஜெயம் ரவி, தெலுங்கில் தருண் தேஜா ஆகியோரை வைத்து இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News